ஒரு சி.இ.ஓ-வின் புகைப்படம், ஒரு ஜிப் ஃபைல், ஒரு வாட்ஸ்அப் எண்; அதன் பிறகு ரூ.10 கோடி காலி

எழுதியவர்: முகமது தாவர்

நாடு முழுவதும் அலுவலகங்களைக் கொண்ட ஒரு புகழ்பெற்ற கார்ப்பரேட் நிறுவனத்தில் மும்பையைச் சேர்ந்த துணைப் பொது மேலாளராகப் பணிபுரியும் கிரீஷ் அமினுக்கு, அவரது மேலதிகாரியிடமிருந்து ஒரு செய்தி வந்தது. நிறுவனத்தின் நிதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட வங்கிச் கணக்கிற்கு ரூ. 46.5 லட்சம் தொகையை மாற்றுமாறு அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சித்தார்த் ஜெயின் அவரிடம் கேட்டிருந்தார்.

ஆங்கிலத்தில் படிக்க:

அமின் சொன்னபடியே செய்தார்.

அடுத்த சில நாட்களில், அமினுக்கு இதே போன்ற அறிவுறுத்தல்கள் வந்தன, அதன்படி அவர் முறையாகச் செயல்பட்டார். இரண்டு வாரங்களுக்குள், அவர் 63 பரிவர்த்தனைகள் மூலம் ரூ.10.40 கோடியை மாற்றியிருந்தார்.

ஜூன் 16 அன்று, அமின் அதிகாரப்பூர்வ சேனல் மூலம் ஜெயினைத் தொடர்பு கொள்ளும் முறை வந்தது. கணக்கு வழக்குகளை முடிப்பதற்காகப் பரிவர்த்தனைகள் தொடர்பான இன்வாய்ஸ்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு அவர் தனது மேலதிகாரியிடம் கேட்டார்.

அப்போதுதான் உண்மை வெளிவந்தது. இவ்வளவு காலமாக அவர் யாருடைய அறிவுறுத்தல்களின்படி செயல்பட்டாரோ, அது ஜெயின் இல்லை.

இருப்பினும், அமினுக்கு நேர்ந்த இந்தத் துயரம் சைபர் குற்ற உலகில் இருந்து உருவெடுத்துள்ள ஒரு புதிய வகையான மோசடிக்கு ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இந்தியாவின் முன்னணி சைபர் குற்றப் புலனாய்வாளர்கள் இதற்கு ஒரு பெயரை வைத்துள்ளனர்: பாஸ் ஸ்கேம்.

இந்த “பாஸ் ஸ்கேமில்”, மோசடி செய்பவர்கள் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊழியர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களின் உயர் அதிகாரிகள், குறிப்பாக சி.இ.ஓ-க்கள் போல ஆள்மாறாட்டம் செய்கிறார்கள். பின்னர் நிறுவனத்தின் பெருமளவிலான பணத்தைப் பறித்து விடுகிறார்கள்.

பாஸ் ஸ்கேம்: ‘பாஸ் ஸ்கேம்’ எவ்வாறு செயல்படுகிறது என்பது இங்கே தருகிறோம்.

அமினின் வழக்கு வெளிச்சத்திற்கு வந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, ஜூன் 22 அன்று, இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) இது தொடர்பாக ஒரு ஆலோசனையை வெளியிட்டது, குடிமக்கள், குறிப்பாகத் தொழில்துறையினர் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டது.

ஏமாற்று அழைப்பிலிருந்து ‘ஏமாற்று’ அழைப்பிற்கு

அந்த நிறுவனத்தில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகக் கழித்த ஒரு தொழில்துறை நிபுணரான அமின் ஒன்றும் புதியவர் அல்ல. ஆனால் ஜூன் 3 அன்று தெரியாத எண்ணில் இருந்து, அது தனது மேலதிகாரி ஜெயினிடமிருந்து வந்தது என்று ஒரு செய்தி வந்தபோது, அவர் அதை நம்பினார். முதலாவதாக, அது ஜெயினின் படத்தை டிபியில் (DP – Display Picture) காண்பித்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, தெரியாத தொலைபேசி எண்ணிற்கு மேலே தெளிவாக இருக்கும் நேர்த்தியான எழுத்துருவில் உள்ள உரை “சித்தார்த் ஜெயின்” என்று குறிப்பிட்டிருந்தது.

அமின் போலீசாரை அணுகிய நேரத்தில், மும்பையிலிருந்து ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள டெல்லியின் ஜசோலா கிளையில் உள்ள ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கியின் வங்கியாளர் ஒருவர், சந்தேகத்திற்கிடமான இரண்டு இளைஞர்கள் வளாகத்திற்குள் நுழைவதைக் கவனித்தார்.

அவர்கள் தங்களது வங்கிக் கணக்குகளில் இருந்து மொத்தம் 8 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை எடுக்கக் கோரினர். “அவர்கள் அழுக்கான ஆடைகளை அணிந்திருந்தனர். மேலும், அவர்களின் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே இவ்வளவு பெரிய தொகையை எடுக்கக் கோரியது வங்கியாளருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் அவர்களிடம் தொடர்ச்சியான கேள்விகளைக் கேட்டார், அவர்கள் மழுப்பினார்கள்…” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

வங்கியாளர் உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். விகாஸ் பிந்த் மற்றும் வான்ஷ் மனோச்சா ஆகிய 22 வயதுடைய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையின் போது, அவர்கள் தங்களுக்கு முறையே ரூ. 30,000 மற்றும் ரூ. 20,000 கமிஷன் தருவதாக உறுதியளிக்கப்பட்டதற்குப் பதிலாக, சட்டவிரோதப் பணத்தைப் பரிமாற்றம் செய்ய யாரோ ஒருவருக்குத் தங்களது வங்கிக் கணக்குகளை “வாடகைக்கு” விட்டதாகப் போலீசாரிடம் தெரிவித்தனர். மற்றொரு கையாளுபவரான ஃபயாஸ் ஆலம் (22) என்பவரும் அதன் பின்னர் விரைவில் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்த பணம் மும்பையில் உள்ள அதே நிறுவனத்தின் கணக்கிலிருந்து வந்தது தெரியவந்தது.

டெல்லி போலீசார் பின்னர் மும்பை தெற்கு மண்டல சைபர் போலீசாரைத் தொடர்பு கொண்டனர், அவர்கள் அமினை அணுகினர்: ஜெயின் என்று கூறிக்கொண்டு, யாருடைய அறிவுறுத்தலின் பேரில் அவர் பணப் பரிமாற்றம் செய்தாரோ, அவர் உபி-யிலிருந்து (UP) செயல்படும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலுடன் சேர்ந்து வேலை செய்வதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு சைபர் மோசடி பேர்வழி ஆவார்.

இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தபோது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அமினைத் தொடர்பு கொண்டது, ஆனால் அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

ஜெயின் போல ஆள்மாறாட்டம் செய்த மோசடி செய்பவர், அமினிடம் அதை “மிகவும் தனிப்பட்ட எண்” என்று சேமிக்குமாறும், யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.

வழக்கை விசாரித்த அதிகாரிகளின் கூற்றுப்படி, ஜூன் 3 அன்று அமினுக்குச் செய்தி வருவதற்கு முன்பே இந்த மோசடி தொடங்கிவிட்டது.

ஒரு ‘மிகவும் தனிப்பட்ட’ எண்

எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட தெற்கு மண்டல சைபர் காவல் நிலைய அதிகாரிகளின் கூற்றுப்படி, அமினின் போனில் ஒரு தீங்கிழைக்கும் வைரஸ் மென்பொருள் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு ஜிப் ஃபைலைக் கண்டறிந்தனர். இத்தகைய ஃபைல்கள் பொதுவாக மோசடி செய்பவர்களுக்குத் தங்களது இலக்கின் தொலைபேசியை ரிமோட் மூலம் அணுகும் வசதியை வழங்குகின்றன.

“இந்த மோசடியின் ஒரு வடிவத்தில், மோசடி செய்பவர்கள், பாதிக்கப்பட்டவரின் மொபைலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பிறகு, பாஸின் உண்மையான எண்ணை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாகத் தங்களது சொந்த எண்ணைச் சேமிக்கிறார்கள். இந்த எண்ணிலிருந்தே செய்திகள் அனுப்பப்படுகின்றன. இருப்பினும், இந்த வழக்கில், அவர்கள் ஜெயினின் எண்ணை நீக்கவில்லை,” என்று ஒரு அதிகாரி கூறினார். அதற்குப் பதிலாக, அவர்கள் ஒரு புதிய எண்ணிலிருந்து அமினைத் தொடர்பு கொண்டு, அது ஜெயினின் மாற்று எண் என்று அவரை நம்ப வைத்தனர்.

ஜெயின் போல ஆள்மாறாட்டம் செய்த மோசடி செய்பவர், அமினிடம் அதை “மிகவும் தனிப்பட்ட எண்” என்று சேமிக்குமாறும், யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.

“இந்த குறிப்பிட்ட செயல்பாட்டு முறை பயன்படுத்தப்படும் பல சந்தர்ப்பங்களில், ஒரு சி.இ.ஓ போன்ற உயர் மட்ட நபராக ஆள்மாறாட்டம் செய்யும் மோசடி செய்பவர், தனது ஜூனியரிடம் தான் ஒரு தனிப்பட்ட எண் மூலம் அவர்களைத் தொடர்பு கொள்வதாகக் கூறுகிறார். உயர் பதவிகளில் இருப்பவர்கள் தனித்தனி தனிப்பட்ட மற்றும் தொழில்முறை எண்களைக் கொண்டிருப்பது அசாதாரணமானது அல்ல என்பதால், இந்தக் கதை மிகவும் நம்பகமானதாகத் தோன்றுகிறது,” என்று ஓர் அதிகாரி கூறினார்.

மேலும் அமின் ஏன் அது உண்மையில் ஜெயின்தான் தன்னைத் தொடர்பு கொண்டார் என்பதை அழைத்துச் சரிபார்க்கவில்லை? அனுப்புநர் தான் ஒரு கூட்டத்திற்குச் செல்வதாகவும், அதனால் தன்னை அழைக்க வேண்டாம் என்றும் அமினிடம் கூறியதாகப் போலீசார் தெரிவித்தனர்.

“அதன்பின்னர் விரைவில், ஆள்மாறாட்டம் செய்தவர் வங்கியின் கணக்கு விவரங்களைப் பகிர்ந்து கொண்டு அமினை ரூ. 46,50,102 தொகையை மாற்றுமாறு அறிவுறுத்தினார், அதை அமின், அந்த அறிவுறுத்தல் உண்மையானது என்று நம்பி, நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து செயலாக்கினார்,” என்று ஓர் அதிகாரி கூறினார்.

ஜூன் 3 மற்றும் ஜூன் 15 ஆகிய தேதிகளுக்கு இடையில், அமின் இதேபோன்ற வாட்ஸ்அப் அறிவுறுத்தல்களின்படி செயல்பட்டு, நிறுவனத்தின் கணக்கிலிருந்து அனுப்புநரால் பெயரிடப்பட்ட பல பயனாளி கணக்குகளுக்குப் பணத்தை மாற்றியதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது. மொத்தம் ரூ. 10,40,71,924 மதிப்புள்ள 63 பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதாகப் புகார் கூறப்பட்டுள்ளது.

டிஜிட்டல் கைது எச்சரிக்கை

மோசடி செய்பவர்கள் அமினைத் தங்களது பாஸுடன் தான் தொடர்பு கொள்கிறார் என்று நம்ப வைக்க முடிந்தாலும், மறுபுறம் போலீசார் தாங்கள் உண்மையான அதிகாரிகள் என்று அமினை நம்ப வைக்கக் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

ஓர் அதிகாரி கூறுகையில், “நாங்கள் முதலில் அமினைத் தொடர்பு கொண்டு, அவர் ஒரு மோசடிக்கு ஆளாகியிருக்கலாம் என்று தெரிவித்தபோது, நாங்கள் உண்மையான போலீசார் என்பதை அவரால் நம்ப முடியவில்லை. ‘டிஜிட்டல் கைது’ வழக்குகளில், மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்றப் பெரும்பாலும் போலீஸ் அதிகாரிகள் போல நடிப்பதால் இது புரிந்துகொள்ளத்தக்கதே. இறுதியாக, அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி, நாங்கள் அவரை நம்ப வைத்தோம்.”

ஒரு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, மும்பை போலீசார் டெல்லி போலீசாரிடமிருந்து மூன்று குற்றவாளிகளையும் தங்களது காவலில் எடுத்தனர். விசாரணையின் அடிப்படையில், மேலும் மூன்று பேர் விரைவில் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் மகாராஷ்டிராவின் ஜால்னாவைச் சேர்ந்தவர். மற்ற இருவருக்கான தேடுதல் பீகாரின் சமஸ்திபூரில் முடிவடைந்தது.

ஆனால் இது ஒரு கேள்வியை எழுப்புகிறது: நிறுவனத்தில் யாரும் ஒரு சந்தேகத்தைக் கூட எழுப்பாமல் இவ்வளவு பெரிய தொகை எவ்வாறு மாற்றப்பட்டது? இந்தியாவில் உள்ள நிறுவனங்களிடம் இதற்கான ஒரு அமைப்பு இல்லையா?

விசாரணையின் போது, நிதியை மாற்றும் போது நிறுவனங்கள் “உருவாக்குபவர்-அங்கீகரிப்பவர்” (creator-approver) முறையைப் பின்பற்றுகின்றன என்பதைப் போலீசார் கண்டறிந்தனர். இதன் ஒரு பகுதியாக, உருவாக்குபவரின் பணப் பரிமாற்றக் கோரிக்கை நியாயமானதா என்பதை ஓர் அங்கீகரிப்பவர் சரிபார்க்கிறார்.

இந்த வழக்கில் நியமிக்கப்பட்ட அங்கீகரிப்பவர்: அமின் அவரேதான்.

“பாதிக்கப்பட்டவரேதான் அங்கீகரிப்பவராக இருந்தார். இந்தப் பணம் 10 மாநிலங்களில் உள்ள 30 நகரங்களில் உள்ள 40 கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்,” என்று அந்த அதிகாரி கூறினார்.

பணமோசடியின் ‘தங்கத் தரம்’ (Gold standard)

வழக்கமாக, இதுபோன்ற மோசடி வழக்குகளில், பணத்தின் தடயத்தை மறைக்கப் பல்வேறு போலி கணக்குகள் (mule accounts) மூலம் பணம் மாற்றப்படுகிறது. இருப்பினும், இந்த வழக்கில், போலீசார் ஒரு புதிய செயல்பாட்டு முறையைக் கண்டுபிடித்தனர். மோசடி செய்பவர்கள் மகாராஷ்டிரா, உபி, மேற்கு வங்கம் மற்றும் பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள பிரபலமான நகைக் கடைகளில் இருந்து தங்கத்தை வாங்கியுள்ளனர்.

குற்றவாளிகளை விசாரித்த போது, சட்ட அமலாக்க முகமைகள் பாரம்பரியமாக சட்டவிரோத நிதியைக் கண்டறிய நம்பியிருக்கும் டிஜிட்டல் காகிதத் தடயத்தை துண்டிப்பதற்கான ஒரு உத்தி இது என்பதை மும்பை போலீசார் கண்டறிந்தனர்.

“நவீன சைபர் குற்றவாளிகள் போலீஸ் சைபர் பிரிவுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நன்கு அறிந்துள்ளனர். தொடர்ச்சியான போலி வங்கிக் கணக்குகள் மூலம் பாயும் நிதியைத் புலனாய்வாளர்கள் விரைவாக முடக்கவும் மற்றும் கண்காணிக்கவும் முடியும் என்பதை அவர்கள் அறிவார்கள்,” என்று ஓர் அதிகாரி கூறினார்.

திருடப்பட்ட பணம் ஆரம்பத்தில் சில போலி கணக்குகள் மூலம் அனுப்பப்பட்டதாகப் போலீசார் தெரிவித்தனர். பின்னர் “கள முகவர்கள்” (Field agents) அந்த நிதியைப் பயன்படுத்திப் பிரபலமான நகைக்கடை நெட்வொர்க்குகளில் இருந்து அதிக மதிப்புள்ள தங்க நகைகளை வாங்குகிறார்கள்.

பின்னர் அந்தப் பௌதிகத் தங்கம் உள்ளூர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களிடம் அடகு வைக்கப்பட்டுத் தங்கக் கடன்கள் பெறப்படுவதாகப் போலீசார் தெரிவித்தனர். இந்த நகைக் கடன்கள் மூலம் பெறப்படும் “சுத்தமான பணம்” (Clean cash) புதிய கணக்குகளின் மூலம் அனுப்பப்பட்டு இறுதியில் சிண்டிகேட் தலைவர்களைச் சென்றடைகிறது என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பின்னர், மற்றொரு சைபர் குற்றத்திலிருந்து பணம் வரும்போது, அது ஒரு கடையிலிருந்து அடகு வைக்கப்பட்ட தங்கத்தை மீட்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது, பின்னர் அது பணத்திற்குப் பதிலாக மற்றொரு கடையில் அடகு வைக்கப்படுகிறது.

“சட்ட அமலாக்க முகமைகள் டிஜிட்டல் பணத்தைக் கண்காணிக்கும் போது, அந்தத் தடம் அவர்களை ஒரு நகைக் கடைக்கு இட்டுச் செல்கிறது. ஆனால் இங்குதான் அந்தத் தொடர்பு துண்டிக்கப்படுகிறது. அந்தப் பௌதிகத் தங்கம் பின்னர் ரொக்கத்தை எடுப்பதற்காக எங்கு அடகு வைக்கப்பட்டது என்பதைக் கண்காணிப்பது நம்பமுடியாத அளவிற்கு கடினமாகிறது,” என்று அந்த அதிகாரி விளக்கினார்.

மும்பை போலீசாரால் பின்னர் கைது செய்யப்பட்ட மூன்று பேரில் பீகாரைச் சேர்ந்த வீரேந்திர குமார் பகத் (26) மற்றும் ரஞ்சன் குமார் கர்வார் (41) ஆகியோர் அடங்குவர். நகைக் கடைகளுக்குச் சென்று நகைகளை வாங்குவது இவர்களது வேலை. ஜால்னாவைச் சேர்ந்த மூன்றாவது குற்றவாளியான ஞானேஷ்வர் தோகே (22) என்பவர், ஆரம்பத்தில் பணத்தை நகர்த்த யாருடைய போலி கணக்கு பயன்படுத்தப்பட்டதோ அவர் ஆவார் என்று போலீசார் தெரிவித்தனர். இதுவரை, இந்த முழு செயல்பாட்டின் பின்னணியில் இருந்த மாஸ்டர்மைண்ட் (Mastermind) யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

சாத்தியமான பாதிக்கப்பட்டவர்களுக்கான வேட்டை

இந்த மோசடியைச் செய்யும் கும்பல்கள், உறுப்பினர்களைக் குழுக்களாகப் பிரித்து, ஒரு முறையான வழியில் செயல்படுகின்றன என்பதைப் போலீசார் அறிந்தனர். நாட்டின் முக்கிய நிறுவனங்களை இலக்காகக் கொண்டு பட்டியலிடுவது ஒரு குழுவின் வேலை. இந்த நிறுவனங்களின் இணையதளங்களுக்குச் சென்று உயர் நிர்வாக அதிகாரிகளின் புகைப்படங்களை இக்குற்றவாளிகள் பதிவிறக்கம் செய்கிறார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

“மோசடி செய்பவர்கள் ஐ.எஃப்.எஸ்.சி (IFSC) குறியீட்டை உறுதிப்படுத்துவதாகக் கூறி இந்த நிறுவனங்களின் அலுவலக லேண்ட்லைனை அழைக்கிறார்கள். இந்த வழியில், அவர்கள் அந்த குறிப்பிட்ட வங்கியின் கணக்குகளைக் கையாளுபவரின் எண்ணைப் பெறுகிறார்கள். இதன்பிறகு, அவர்கள் தங்களது இலக்கிற்கு ஒரு லிங்க்கை அனுப்புகிறார்கள், அதை கிளிக் செய்தவுடன், போனில் ஒரு  ஜிப் (.zip) ஃபைல் இன்ஸ்டால் ஆகிறது. இது மோசடி செய்பவர்களுக்குத் தங்களது இலக்குகளின் சாதனத்திற்கான அணுகலை வழங்குகிறது,” என்று அந்த அதிகாரி கூறினார்.

சைபர் குற்றவாளிகள் அவசர ஒழுங்குமுறை இணக்கம் என்ற போர்வையில் ரெகுலேட்டர்கள் போல நடித்து மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் மூலம் தீங்கிழைக்கும் கோப்புகளை அனுப்பி உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளை இலக்காகக் கொள்கிறார்கள் என்று I4C தனது ஆலோசனையில் தெரிவித்துள்ளது.

“இந்த மால்வேர் (Malware) நிர்வாகியின் விண்டோஸ் சாதனம் மற்றும் செயலில் உள்ள வெப் வாட்ஸ்அப் (Web WhatsApp) அமர்வுகளைப் சமரசம் செய்கிறது, இது மோசடி செய்பவர்கள் கீழ்நிலை ஊழியர்களுக்குச் செய்தி அனுப்பவும் மற்றும் மோசடியான நிதிப் பரிமாற்றங்களை ஒருங்கிணைக்கவும் உதவுகிறது,” என்று அந்த ஆலோசனை கூறுகிறது.

முழுமையான சாதனக் கட்டுப்பாடு

“அந்தச் செய்தியில் ஒரு சுருக்கப்பட்ட ஜிப் ஃபைல் (.zip)உள்ளது. இந்தக் ஃபைலுக்குள் டைனமிக் லிங்க் லைப்ரரி (.dll) ஃபைலுடன் கூடிய தீங்கிழைக்கும் இயங்கக்கூடிய (.exe) ஃபைல் உள்ளது. பல சந்தர்ப்பங்களில் பார்த்தபடி, சி.இ.ஓ இந்தச் செய்தியை நிதி அதிகாரிக்கு அனுப்புகிறார். நிர்வாகி இந்தத் கோப்பை ஒரு விண்டோஸ் டெஸ்க்டாப் அல்லது லேப்டாப்பில் பிரித்தெடுத்து இயக்கும் போது, ஒரு ட்ரோஜன் டிராப்பர் (Trojan dropper) தொடங்கப்படுகிறது. மால்வேர் கணினியில் ஒரு நிலையான பிடியை நிறுவி, கணினியைச் சமரசம் செய்து, செயலில் உள்ள வெப் வாட்ஸ்அப் அமர்வு டோக்கன்களைக் கடத்துகிறது,” என்று போலீசார் தெரிவித்தனர்.

நிர்வாகியின் வாட்ஸ்அப் கணக்கிற்கான அணுகலைப் பெற்ற மோசடி செய்பவர், கணக்குகள் அல்லது நிதி ஊழியர்களைத் தொடர்பு கொண்டு, குறிப்பிட்ட போலி வங்கிக் கணக்குகளுக்கு உடனடியாகப் பணம் செலுத்துமாறு அறிவுறுத்துகிறார்.

மாற்றுச் சூழ்நிலைகளில், தாக்குபவர் சாதனத்தின் முழுமையான கட்டுப்பாட்டைப் பெற்றால், அவர்கள் சாதனத்தின் தொடர்புப் பட்டியலை ரகசியமாக மாற்றி, தாக்குபவர் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மோசடியான தொலைபேசி எண்ணை “சி.இ.ஓ”-வின் பெயரில் சேமித்து, நிதியை மாற்றுமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்த அந்த இரண்டாம் நிலை எண்ணைப் பயன்படுத்துகிறார்கள். அமினின் வழக்கிலும் இதுதான் நடந்தது என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில், உ.பி-யை தளமாகக் கொண்ட ஒரு கும்பல் இந்தச் செயல்பாட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று அவர்கள் சந்தேகிக்கிறார்கள் என்று ஒரு அதிகாரி கூறினார். “இந்த வழக்கில் நாங்கள் கண்டறிந்த சில எண்கள் பிப்ரவரியில் நடத்தப்பட்ட இதேபோன்ற மோசடியில் வெளிவந்தன. இரண்டு எண்களும் உ.பி-யில் உள்ள லக்னோவைச் சேர்ந்தவை,” என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

நிறுவனம் இழந்த பணத்தில், மோசடியில் இழந்த தொகையில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை முடக்கப் போலீசார் முடிந்துள்ளனர். இந்தத் தொகை சட்டப்பூர்வ வழிகள் மூலம் மீட்டெடுக்கப்படும் என்று கூறிய ஒரு அதிகாரி, மீதமுள்ள தொகையைக் கண்டறிவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகச் சேர்த்துக் கொண்டார்.

Source link