பெய்ரூட்: ஈரான் – இஸ்ரேல் போரில் நடுவில் சிக்கிக் கொண்டுள்ள லெபனானில், பெண்கள், குழந்தைகள் உட்பட 900க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர்.
மேற்காசிய நாடான ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர்ந்துள்ள போர், 19வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இந்தப் போரில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, லெபானானைச் சேர்ந்த ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பு, கடந்த 2ம் தேதி இஸ்ரேலுக்கு எதிராக ஏவுகணை மற்றும் ட்ரோன்களை ஏவியது.
லெபனானை இஸ்ரேல் ஆக்கிரமித்தபோது, ஈரான் ஆதரவுடன் ஷியா முஸ்லிம்கள் ஒன்றிணைந்து, 1982ல் உருவாக்கப்பட்டதே, ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பு. இதனால், ஈரான் மீதான தாக்குதலைக் கண்டித்து இஸ்ரேலுக்கு எதிராக அவர்கள் களமிறங்கிறங்கினர். இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, லெபனான் மீது இஸ்ரேலும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்பட ஹெஸ்பொல்லா கட்டுப்பாட்டில் உள்ள பல பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்கி வருகிறது. இதில், 886 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 67 பெண்கள், 111 குழந்தைகள் மற்றும் 38 சுகாதாரப் பணியாளர்கள் அடங்குவர்; மேலும் 2,141 பேர் காயமடைந்துள்ளனர்.இந்தப் போரில் ஈரானுக்கு அடுத்தபடியாக லெபனானில் தான் அதிகம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தாக்குதல் அச்சம் காரணமாக, 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். லெபனான் மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.
இதுவரை பாதிப்பு!
* இஸ்ரேல் புதிய தரைவழி தாக்குல்களை தொடங்கியுள்ளதால், லெபனானில் ஐந்தில் ஒருவர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது
* லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக, 394 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன
* இஸ்ரேலிய போர் விமானங்கள், பெய்ரூட்டின் மையப்பகுதியில் உள்ள ஹரேட் ஹ்ரெய்க், பஷூரா மற்றும் கடற்கரையோரத்தில் உள்ள ரம்லெட் அல் பைடா உட்பட பல பகுதிகளை தாக்கியுள்ளன
* கடந்த 2023ல் ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக களமிறங்கியதால் இஸ்ரேலுக்கும், ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகளுக்கும் இடையிலான எல்லை தாண்டிய சண்டை தொடங்கியது
* கடந்த 2023 அக்டோபர் 7 முதல் லெபனானில் நடந்த இஸ்ரேலியத் தாக்குதல்களில் இதுவரை 5,282 பேர் கொல்லப்பட்டுள்ளனர்
* நாடு முழுதும் உள்ள 100-க்கும் மேற்பட்ட நகரங்களும், கிராமங்களும் இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டாய வெளியேற்ற உத்தரவுகளின் கீழ் உள்ளன
* லெபனானில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள், அதாவது மக்கள் தொகையில் 18 சதவீதம் பேர், கடந்த இரண்டு வாரங்களில் இடம்பெயர்ந்துள்ளனர்
* கடந்த 14 மாதங்களில் இஸ்ரேலிய தாக்குதல்களால் லெபனானில் வீடுகளுக்கும் உள்கட்டமைப்புகளுக்கும், 23,500 கோடி ரூபாய் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளது.
