மதுரை: நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வணிக சொத்துகளை இணையதளம் வாயிலாக, ஜூலை 22ல் ஏலம் விட மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிறுவனம், நிதி மோசடி வழக்கில் சிக்கியது. நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப பெற்றுத் தரும் வகையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தற்போது கைப்பற்றப்பட்ட சொத்துகள் மின்னணு முறையில் ஏலம் விடப்படுகிறது.
தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரியில் உள்ள குற்றாலம் ரிசார்ட், திண்டுக்கல் மாவட்டம் ஜம்புதுரை கோட்டையில் உள்ள கொடைரோடு டிரைவ் இன் ஓட்டல், கொடை ரோடு கேட்டரிங் இன்ஸ்டிடியூட், மதுரை மாவட்டம் கீழச்சின்னம்பட்டியில் உள்ள பேவர் பிளாக் தொழிற்சாலை ஆகியவை ஜூலை 22 காலை 10:30 முதல் ஜூலை 23 மாலை 5:00 மணி வரை https://www.mstcecommerce.com/auctionhome/nmgp/index.jsp என்ற தளத்தில் மின்னணு முறையில் ஏலம் விடப்படவுள்ளது.
ஆர்வமுள்ள ஏலதாரர்கள் சொத்துகள் தொடர்பான விபரங்களை பொருளாதார குற்றப்பிரிவு இணையதளமான https://tneow.tn.gov.in/ ல் பார்வையிடலாம். ஏற்கனவே நடந்த மின்னணு ஏலத்தில் பங்கேற்று பிளாட்களை ஏலத்தில் எடுத்த முதலீட்டாளர்கள் எம்.எஸ்.டி.சி.,க்கு செலுத்த வேண்டிய சேவை கட்டணத்தை உடனே செலுத்த தவறினால் ஏலத்தை நீதிமன்றம் ரத்து செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
