வாஷிங்டன்: ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தற்போதைய ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க மறுத்த, பதிலளிக்காத நட்பு நாடுகளை அதிபர் டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எந்தவொரு கச்சா எண்ணெய் கப்பலும் செல்லக் கூடாது என ஈரான் எச்சரித்துள்ளது. மேலும், மீறி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க உதவுமாறு சீனா, ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்தார்.
ஆனால், பல்வேறு நாடுகள் அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்து உள்ளன. அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க மறுத்த, பதிலளிக்காத நட்பு நாடுகளை அதிபர் டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:
ஈரானின் பயங்கரவாத அரசின் எஞ்சிய பகுதியை நாம் முற்றிலுமாக ஒழித்துவிட்டு, ஹார்முஸ் ஜலசந்தி பகுதிகளை பயன்படுத்தும் நாடுகளை கப்பல் போக்குவரத்து பாதுகாப்புக்கு பொறுப்பேற்கச் செய்தால் என்ன நடக்கும் என்று நான் யோசிக்கிறேன். அது, பதிலளிக்காத நமது கூட்டாளிகள் சிலரை உடனடியாகச் செயல்பட வைக்கும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
