டெஹ்ரான் : ஈரான் மீதான போர் துவங்கிய பின், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பெரும்பாலான கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், ஈரான் மட்டும் தன் எண்ணெய் ஏற்றுமதியை துணிச்சலுடன் தொடர்ந்து வருகிறது.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், கடந்த 28ம் தேதி முதல் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. தொடர்ந்து, 19வது நாளாக நேற்றும் இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணை தாக்குதல்களில் ஈடுபட்டன.
இதற்கிடையே, பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவை இணைக்கும், தன் எல்லையை ஒட்டியுள்ள, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. சர்வதேச கச்சா எண்ணெய் வினியோகத்தில், 2-0 சதவீதம் இந்த பாதை வழியாகவே நடக்கிறது. இந்த வழியாக செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்களை தாக்குவதாக ஈரான் மிரட்டல் விடுத்தது. இதையடுத்து, ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்து கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததுடன், பல நாடுகளில் பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டது.
ஆனால், இந்த சமயத்தில், ஈரான், 1.6 கோடிக்கும் மேற்பட்ட பேரல் எண்ணெயை ஏற்றுமதி செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இம்மாத 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை, 90 கப்பல்கள் ஜலசந்தியை கடந்துள்ளன.போருக்கு முன் நாள்தோறும், 100 முதல் 135 கப்பல்கள் வரை சென்று வந்த நிலையில், தற்போது பெருமளவு குறைந்துள்ளது. ஆனால், ‘டார்க் டிரான்சிட்’ எனப்படும் மறைமுகமாக செல்லும் கப்பல்கள் உட்பட ஈரானுடன் தொடர்புடைய பல கப்பல்கள் கடந்துள்ளன. சீனா, கிரீஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த கப்பல்களும் இதில் அடங்கும்.
அதன்படி, பாகிஸ்தானுக்கு சொந்தமான ‘கராச்சி’ என்ற கச்சா எண்ணெய் டேங்கரும், நம் நாட்டின் ‘சிவாலிக்’ மற்றும் ‘நந்தா தேவி’ என்ற எல்.பி.ஜி., கப்பல்களும், சமீபத்தில் ஜலசந்தியை கடந்துள்ளன.
