பிரதமர் வேட்பாளராகிறாரா விஜய்? ஆர்.பி.உதயகுமார் கிளப்பிய புதிய சர்ச்சை!

தமிழக அரசியல் வரலாற்றில் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்து அசத்தியுள்ளது தமிழக வெற்றிக் கழகம். குறிப்பாக அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த திராவிட கட்சிகளை தூக்கி எறிந்தது தான் தவெக-வின் பலமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு திமுக நிலைத்தன்மையுடன் இருந்தாலும், கூட்டணி கட்சிகள் திமுக-வை கைவிட்டன. மறுபுறம் அதிமுக-வை அக்கட்சி எம்எல்ஏ-க்களும், முக்கிய நிர்வாகிகளும் கைவிட்டனர். குறிப்பாக அதிமுகவில் இருந்து 6 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். மேலும் பல அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அதிமுக எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார் முதல்வர் விஜய்யை பிரதமாக்க முயற்சி நடப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “சமூக வலைதளங்களில் நரேட்டிவை உருவாக்கி முதல்வர் விஜய் செய்யாததையும், செய்ததாக இன்ஃப்ளூயன்சர்கள் மூலம் தகவல்கள் பரப்பப்படுகின்றன. தொடர்ந்து ஃபேக் ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் பரப்பபட்டு வருகின்றன.

இதனைப் பார்க்கும் போது 2029-ல் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக்க முயற்சி நடப்பதாக தெரிகிறது. போலியான ரீல்ஸ்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்படுவது குறித்து மத்திய அரசும், உளவுத்துறையும் விழிப்புடன் இருக்க வேண்டும்” என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Source link