– நமது சிறப்பு நிருபர் –
கடந்த சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., கூட்டணியில் முதல் கட்சியாக தொகுதி பங்கீட்டை முடித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, இப்போது தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய முடியாமல் திணறுகிறது.
இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: தொகுதி பங்கீடு குறித்து, வி.சி., தலைவர் திருமாவளவனுடன், தி.மு.க., மூத்த அமைச்சர்கள் ஏற்கனவே பேசியுள்ளனர். வி.சி., தரப்பில், ‘எங்கள் கட்சிக்கு இரண்டு எம்.பி.,க்கள், நான்கு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்; இந்த தேர்தலில் எட்டு தொகுதிகள் ஒதுக்க வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டது. அதற்கு, ‘கூட்டணியில் ஆரம்பம் முதல் நம்பிக்கைக்கு உரியவராக திருமாவளவன் உள்ளார். கூட்டணியில் அதிக கட்சிகள் இணைந்துள்ளன; அவர்களுக்கும் தொகுதிகளை ஒதுக்க வேண்டும்.
பழைய எண்ணிக்கையில் ஒன்றாவது குறைத்துக் கொள்ளுங்கள்’ என, தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதை, திருமாவளவன் ஏற்கவில்லை. பின், ‘மூன்று பொது தொகுதிகள் உட்பட எட்டு தொகுதிகள் தர வேண்டும்; ஒரு தொகுதியை மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தர வேண்டும்’ என, வி.சி., தரப்பில் கேட்கப்பட்டுள்ளது.
‘சரி தருகிறோம். ஆறு தொகுதிகளில் பானை சின்னத்தில் நிற்கலாம். ஒரு தனி மற்றும் பொது தொகுதியில் மட்டும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும்’ என, தி.மு.க.,வால் நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. அதற்கு, ‘கடந்த தேர்தலில் தான் எங்கள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது; எனவே, இந்த தேர்தலில், சொந்த சின்னத்தில் தான் போட்டியிடுவோம்’ என, வி.சி., தரப்பில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
