தவெக எம்எல்ஏ கைது செய்யப்படவில்லை.. திமுக எம்எல்ஏக்களை மட்டும் குறி வைத்து கைது: உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் – udhayanidhi stalin strongly condemns vilathikulam dmk mla markandeyan arrest

திமுகவை சார்ந்த விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், முதல்வர் ஜோசப் விஜய்யை மிரட்டும் தொனியில் பேசியதாக இன்றைய தினம் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் இவ்விவகாரத்தில் தவெக அரசுக்கு திமுகவை சார்ந்த தலைவர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் , எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது சம்பந்தமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.

ஏற்கனவே திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் குறித்து ஒருமையிலும் அவதூறாகவும் பேசியதாக கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அன்றைய தினமே நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டார். அப்போதே அவதூறு வழக்கிற்கு இதுவரை தமிழக அரசியல் களத்தில் கைது நடந்தது இல்லை என எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் திமுக எம்எல்ஏ ஒருவர் முதல்வர் குறித்து பேசியதற்காக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பினை கிளப்பியுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் மார்க்கண்டேயன், முதல்வரை பொதுக்கூட்டத்தில் விமர்சித்துப் பேசினார் என்று சோஃபா மாடல் அரசு கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.

அவர் ஒரே நாளில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மக்கள் பிரதிநிதி என்றும் பார்க்காமல் பொதுக்கூட்டத்தில் பேசினார் என்பதற்காக காலை ஆறு மணிக்கே காவல்துறையை வீட்டுக்கு அனுப்பி கைது செய்துள்ளனர். அவரை விசாரணை என்ற பெயரில் எஸ்பி அலுவலகத்தில் அடைத்து வைத்து இருப்பது உட்சபட்ச அடக்குமுறை.

இதே தூத்துக்குடி மாவட்டத்தில், கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணாலேயே குற்றம்சாட்டப்பட்ட தவெகவை சார்ந்த எம்எல்ஏ, கைது ஏதும் செய்யப்படாமல் லாரி டயர்களை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். இத்தகைய சூழலில் கழக சட்டமன்ற உறுப்பினரை மட்டும் காவல்துறை குறி வைத்து கைது செய்கிறது. எதிர்க்கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்தினால், அரசிற்கு அங்கு பாராட்டு பத்திரம் வாசிக்க வேண்டும் என ஆளுங்கட்சியினர் எதிர்பார்ப்பது அவர்களுடைய அறியாமையையே காட்டுகிறது என கடுமையாக விமர்சித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

தொடர்ந்து அவருடைய எக்ஸ் தள பதிவில், ஆளும் அரசுடைய சரி தவறுகளை சுட்டிக்காட்டுகின்ற – விமர்சனம் செய்கின்ற மாபெரும் ஜனநாயகக் கடமை எதிர்க்கட்சிக்கு உள்ளது. இது புரியாமல், பேசினாலே கைது என்று தொடரும் இந்த அரசுடைய அராஜகத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது போன்று ஆணவத்தில் எத்தனை கைதுகளை செய்தாலும், ஒருபோதும் கழக உடன்பிறப்புகள் அஞ்சமாட்டோம்.

இந்த ஆட்சியாளர்கள் மக்கள் மன்றத்திலும் – நீதிமன்றத்திலும் பின்னடைவை சந்திக்கப்போவது உறுதி என்று தன்னுடைய பதிவில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி ஆகியோரும் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைதுக்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link