திமுக விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பல விதமான விவாதங்களையும், விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது. முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியதாக மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கைக்கு எதிராக திமுகவினர் தொடர்ச்சியாக கடுமையான கண்டனங்களை தெரிவித்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் முன்னாள் சபாநாயகர் திமுகவை சார்ந்த அப்பாவு, இவ்விவகாரம் தொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில் விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கோவில்பட்டியில் திமுக சார்பாக நடந்த பொதுக்கூட்டத்தில் தவெகவை விமர்சித்து பேசினார். அதோடு பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா என அரசியல் தலைவர்கள் பலர் தோல்வி அடைந்துள்ளனர். அப்போது கூட ஒருவருக்கொருவர் மரியாதையுடனும், நாகரிகத்துடனும் நடந்து கொண்டனர். ஆனால் தற்போது உங்க அப்பாவை காணோம் என்று முதல்வர் சட்டப்பேரவையில் பேசுகிறார்.
இது ஏற்க முடியாத ஒன்று கடுமையாக விமர்சித்து இருந்தார். அதோடு சட்டமன்றத்தில் கதவை பூட்டி விடுவோம் என்று முதல்வர் விஜய் பேசியதற்கு, கதவுகளை மூடினால் அவருடை எலும்புகளை உடைத்து அனுப்புவோம் என பேசியிருந்தார். இதனையடுத்து தவெக நிர்வாகிகள் முதல்வரை மிரட்டும் வகையில் பேசியதாக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் அவர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கைதுக்கு எதிராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கண்டன குரல்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. அதில் பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா , கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் மீதான விமர்சனத்தை எளிதில் கடந்து சென்று விடுவார்கள். அவர்களுடைய வழியில் வந்தவர் தளபதி மு.க. ஸ்டாலின்.
அவர் தன்னை பார்த்து முட்டாள் முதல்வரே என்று ஒருவர் விமர்சித்த சமயத்தில் இப்படித்தான் முட்டாள் பேசுவான் என்று கடந்து சென்றார். சிஎம் சார் நீங்களோ சட்டப்பேரவையில் உங்கள் அப்பாவை எங்கே காணோம் என்று நையாண்டி செய்கிறீர்கள். முன்னாள் முதல்வரை ஐந்து நிமிடம் பேச்சில் கொத்து புரோட்டோ போட்டு விட்டேன் என்று கொக்கரிக்கிறீர்கள். பார்ட்டி பண்ட் என்று ஆதாரம் இல்லாமல் பேசி ஆனந்தப்படுகிறீர்கள்.
கரூர் பொதுக் கூட்டத்திலே ஓடு ஓடு ஓடு ஓடு என்று அங்க அசைவுடன் பாட்டு பாடி, சட்டமன்ற கதவை இனிமேல் பூட்டுவேன் என்று ஆணவமாய் பேசுகிறீர்கள். என்ன மொழியில் நீங்கள் பேசினீர்களோ, அதே மொழியில் மார்க்கண்டேயன் பதில் தந்துள்ளார். சட்டமன்றத்திற்குள் எங்களை பூட்டி வைத்து ஏதாவது செய்ய நினைத்தால், எங்கள் கை பூ பறிக்கவா செய்யும்? என்று அவர் தற்காப்பு உணர்வுடன் பேசியுள்ளார். முட்டாள் முதல்வரே என்று பேசியவர்க்கும், தம்பி குடும்ப்ட்டினை வீடு புகுந்து தாக்கியவருக்கும், மைதானத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியவருக்கும் அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்க்குறீர்கள் நீங்கள்.
உங்களுடைய கட்சியினருக்கு ஒரு நியாயம்? எதிர்க்கட்சியினருக்கு ஒரு நியாயமா? என கடுமையாக விமர்சித்துள்ளார் அப்பாவு. தொடர்ந்து உதவி கேட்டு வந்த தவெக இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை பெருண்டன்மையுடன் உங்கள் கட்சியில் எம்எல்ஏவாக தொடர அனுமதி தந்துள்ளீர்கள். உங்களோடு இருப்பவர்களுடைய குற்றங்களை பொறுத்துக்கொள்ள பழகிய உங்களுக்கு எதிர்க்கட்சியினரின் விமர்சனத்தை ஏற்கும் மனப்பக்குவம் இல்லாமல் போனது ஏன் என்ற கேள்வியையும் அப்பாவு முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
