டெஹ்ரான்: ஈரானின் தேசியப் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியின் மரணத்திற்காக அமெரிக்காவும் இஸ்ரேலும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரானின் புதிய ஆட்சியாளர் அயதுல்லா மொஜ்தபா கமேனி எச்சரித்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு படைகளுக்கு இடையே 20 நாட்களாக போர் நடக்கிறது. ஈரானின் முக்கிய தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஈரானின் மேலும் ஒரு முக்கிய தலைவர் கொல்லப்பட்டார். 67 வயதான அலி லாரிஜானி, மறைந்த ஆட்சியாளர் அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகு ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். இவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இது குறித்து சமூகவலைதளத்தில் மொஜ்தபா கமேனி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் உரிய பழிவாங்கல் உண்டு; இந்தத் தியாகிகளின் குற்றவாளிகளான கொலையாளிகள் விரைவில் அதற்கான விலையைக் கொடுக்க நேரிடும். லாரிஜானி அறிவு, தொலைநோக்கு மற்றும் ஞானம் கொண்ட மனிதர். இஸ்லாமிய அமைப்பின் பல்வேறு நிலைகளில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் சேவையாற்றினார். அதுவே அவரை ஒரு புகழ்பெற்ற ஆளுமையாக உருவாக்கியது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஈரான் அதிபர் இரங்கல்
இஸ்ரேல் தாக்குதல்களில் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டதை ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் உறுதிசெய்து, அதனை ஒரு கோழைத்தனமான படுகொலை என்று குறிப்பிட்டார். மேலும் ஈரான் தலைவர்கள் அலி லாரிஜானி மற்றும் அஜீஸ் நசீர்சாதே ஆகியோரின் மரணங்கள் குறித்தும் அவர் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
எனது அன்புக்குரிய சகாக்களான இஸ்மாயில் கதிப், அலி லாரிஜானி, மற்றும் அஜீஸ் நசீர்சாதே ஆகியோரும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கோழைத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டிருப்பது எங்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என ஈரான் அதிபர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
