பீஜிங்: சர்வதேச அளவில், நாடுகளுக்கு இடையேயான ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு நிர்வாகம் தொடர்பாக சீனா துவங்கியுள்ள புதிய அமைப்பில், 29 நாடுகள் இணைந்துள்ளன. ஆனால், மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன், இந்த அமைப்பில் இணையாமல் இந்தியா தள்ளி நின்றுள்ளது.
நம் அண்டை நாடான சீனாவில் சமீபத்தில், டபிள்யூ.ஏ.ஐ.சி.ஓ., எனப்படும், சர்வதேச செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. இதை சீன அதிபர் ஷீ ஜின்பிங் தொடங்கி வைத்தார். இதில், ஐ.நா., பொதுச் செயலர் அந்தோனியோ குட்டரெஸ் கலந்து கொண்டார்.
ஷாங்காயை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட உள்ள இந்த நாடுகளுக்கு இடையேயான ஏ.ஐ., நிர்வாக அமைப்பு, ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் உலகளாவிய நிர்வாகத்தில் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்திற்கு சீனா விடுக்கும் நேரடி சவாலாக பார்க்கப்படுகிறது.
இந்த அமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில், ரஷ்யா, பாகிஸ்தான் உட்பட, 29 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இதில் 10 ஆப்ரிக்க நாடுகளும், 12 ஆசிய நாடுகளும் உள்ளன. இந்தியாவை தவிர, ‘பிரிக்ஸ்’ அமைப்பில் உள்ள அனைத்து உறுப்பு நாடுகளும் இந்த அமைப்பில் இணைந்துள்ளன.
ஆனால், இந்தக் கூட்டத்தில் இந்தியா பங்கேற்காமல், கூட்டமைப்பில் இணையாமல் தவிர்த்துள்ளது.
சீனா, தொழில்நுட்ப தாக்கமில்லாத மாற்று தொழில்நுட்ப நிர்வாகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. அதே நேரத்தில், ‘பாக்ஸ் சிலிகா’ என்ற அமெரிக்க தலைமையிலான கூட்டமைப்பில் ஏற்கனவே ஒரு அங்கமாக இந்தியா உள்ளது. இதில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகள் உள்ளன.
இதுவே சீனா உருவாக்கியுள்ள புதிய ஏ.ஐ., கூட்டமைப்பில் இந்தியா இடம்பெறாததற்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும், தன் சொந்த திறனை உருவாக்கும் முயற்சியில் நம் நாடு ஈடுபட்டுள்ளது. அதனால், சீனா தலைமையிலான அமைப்பில் இடம்பெறாமல் நம் நாடு தவிர்த்துள்ளது.
