பொதுமக்கள் பயன்பாட்டுத் திட்டங்களை எவ்வித தொய்வுமின்றி செயல்படுத்துவதற்காகத் தமிழக முதலமைச்சர் விஜய் தொடர்ந்து பல்வேறு கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், சென்னை சேத்துப்பட்டில் குப்பைகளிலிருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கும் ஆலைக்கு இன்று நேரில் சென்ற முதலமைச்சர், அதன் செயல்பாட்டு நிலவரங்களை தீவிரமாக ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
தமிழக முதலமைச்சர் விஜய் அண்மைக்காலமாகப் பல்வேறு அரசுத் திட்டப் பணிகளை நேரடியாகச் சென்று ஆய்வு செய்து வருகிறார். நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் சைதாப்பேட்டை எம்.சி. இராஜா சமூக நீதி மாணவர் விடுதி ஆகியவற்றில் அவர் அண்மையில் நடத்திய திடீர் ஆய்வுகள் மற்றும் உடனடி நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.
இதன் தொடர்ச்சியாக, இன்று சென்னை சேத்துப்பட்டு பகுதியில் அமைந்துள்ள பயோ சி.என்.ஜி ஆலைக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அதிரடி கள ஆய்வு நடத்தினார். மாநகராட்சியில் சேகரிக்கப்படும் ஈரக்கழிவுகளைக் கொண்டு இயற்கை எரிவாயு தயாரிக்கும் இந்த மையத்தின் தினசரி உற்பத்தித் திறன், பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் விரிவாகக் கேட்டறிந்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை சேத்துப்பட்டு உயிரி எரிவாயு ஆலையில் ஆய்வு#CMJosephVijaypic.twitter.com/GndQHf6puu
— CMOTamilNadu (@CMOTamilnadu) July 20, 2026
இயந்திரங்களின் இயக்க நிலை மற்றும் தூய்மைப் பணிகளைப் பார்வையிட்ட முதலமைச்சர், பணிகளில் எவ்விதத் தொய்வும் இன்றி திட்டத்தை முழுத் திறனுடன் விரைந்து செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், விதிகளை மீறி திடக்கழிவுகளை அப்புறப்படுத்தும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, முதலமைச்சரின் வருகையை அறிந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டு வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
