வாஷிங்டன்: மேற்கு ஆசியாவில் தொடரும் போருக்கு மத்தியில், ஈரான் கத்தார் மீது புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலை மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ராஸ் லபானில் ஏற்பட்ட மூன்று தீ விபத்துகளில் இரண்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கத்தார் தெரிவித்துள்ளது. யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் கத்தார் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஈரான் கத்தார் மீது புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஈரானுக்கு ஏற்படக்கூடிய நீண்டகால விளைவுகள் காரணமாக தீவிர ராணுவ நடவடிக்கைக்கு அங்கீகாரம் அளிக்க விரும்பவில்லை.
ஈரான் கத்தார் மீது புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும். கத்தாரின் எல்பிஜி ஆலை மீண்டும் குறிவைக்கப்பட்டால், அவ்வாறு செய்ய தயங்க மாட்டேன். ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு கிடங்கு மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
தடைகள் தளர்வு
உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதிக்கான முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான கட்டுப்பாட்டை ஈரான் அதிகரித்துள்ளதால், கச்சா எண்ணெய் விலைகள் 5 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 108 டாலருக்கும் அதிகமாக உயர்ந்தன. மோதல் தொடங்கியதிலிருந்து கச்சா எண்ணெய் விலைகள் 50 சதவீதம் உயர்ந்துள்ளன. எண்ணெய் நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், வெனிசுலா மீதான தடைகளை அமெரிக்கா தளர்த்தியுள்ளது.
