எழுதியவர்: ஜதின் ஆனந்த், லிஸ் மேத்யூ
நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது என்றும், அவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய முன்னணி (துரந்தர்) வழக்கறிஞர்களைக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். இந்தக் கூட்டத்தின் விவரங்களை மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் விவரித்தார்.
கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதன் முக்கிய அம்சங்கள்:
”வினாத்தாள் கசிவு தொடர்பான தகவல்கள் வெளியான உடனேயே அரசு விரைந்து செயல்பட்டு, 13 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, நீட் மறுதேர்வு தகுந்த முன்னுரிமையுடன் நடத்தப்பட்டு முடிவுகளும் தாமதமின்றி வெளியிடப்பட்டுள்ளன.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களின் (Dhurandhar lawyers) உதவியோடு உச்சகட்ட தண்டனை பெற்றுத் தரப்பட வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் நிகழாமல் இருக்கும். இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது. இது மத்திய அரசு அல்லது மாநில அரசு சார்ந்த விஷயம் மட்டுமல்ல; நாட்டின் எதிர்காலமான இளைஞர்கள் தொடர்பானது.
மாணவர்களை தவறான பாதைக்கு வழிநடத்துவது எளிது. ஆனால் சரியான பாதையைக் காட்டுவதே கடினம். எதிர்க் கட்சிகள் இந்த விவகாரத்தை வைத்து மாணவர்களைத் திசைதிருப்ப முயல்கின்றன. எம்.பி.க்கள் அனைவரும் தங்கள் தொகுதிகளிலுள்ள இளைஞர்களைச் சந்தித்து, அரசு அவர்களுக்கு நீதியை வழங்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
இளைஞர்களின் நம்பிக்கையை நாம் வென்றெடுக்க வேண்டும். அவர்களுக்கு எந்தவித அநீதியும் இழைக்கப்பட மாட்டாது; குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்” என்று பிரதமர் மோடி கூட்டத்தில் பேசியதாக கிரன் ரிஜூஜூ தெரிவித்தார்.
மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான திங்கள்கிழமை, காக்ரோச் ஜனதா கட்சி (CJP) தலைமையில் ஆயிரக்கணக்கானோர் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தினர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.
டெல்லி காவல்துறை பேரணியைத் தடுக்க முயன்றபோது மோதல் ஏற்பட்டது. நிலைமையை கட்டுப்படுத்த தடியடி மற்றும் கண்ணீர்ப்புகை பயன்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 200-க்கும் மேற்பட்டோர், அதில் 100-க்கும் அதிகமான காவல்துறையினரும் காயமடைந்தனர்.
இந்த வன்முறை தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேசிய தலைநகரின் அமைதியை சீர்குலைக்க சதித்திட்டம் இருந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்கைரூட் ஏவுதள வெற்றிக்கும் பாராட்டு
என்.டி.ஏ. கூட்டத்தில், இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்-இன் வெற்றிகரமான ராக்கெட் ஏவுதலையும் பிரதமர் மோடி பாராட்டினார்.
30 வயதுக்குட்பட்ட இளம் தொழில்முனைவோரின் திறமையை இந்த வெற்றி வெளிப்படுத்துவதாகக் கூறிய அவர், “இவர்கள் 56 வயதை எட்டும் போது நாட்டிற்கு எவ்வளவு பெரிய பங்களிப்பு செய்வார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள்” என்று கூறியதாக கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். இந்தக் கருத்து, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்ததாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
