ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. சஞ்சு சாம்சன், ஜஸ்பரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங் போன்றவர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர்.
சூர்யவன்ஷிக்கு அருமையான வாய்ப்பு: சமீபத்தில், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பினை பெற்ற வைபவ் சூர்யவன்ஷி, 3 போட்டிகளில் 42 ரன்களைதான் அடித்தார். ஒரு போட்டியில், அதிகபட்சமாக 15 ரன்களைதான் அடிக்க முடிந்தது. தற்போது, ஜிம்பாப்வே தொடரில் சாம்சனை சேர்க்கவில்லை. இதனால், சூர்யவன்ஷி தனது திறமையை நிரூபிக்க அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதிலும், சொதப்பினால், சூர்யவன்ஷிக்கு பின்னடைவாகதான் அமையும்.
அபிஷேக் சர்மாவைப் போலவே: 2024ஆம் ஆண்டில், அபிஷேக் சர்மா ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில், அறிமுக வீரராக இடம்பெற்று, சதம் அடித்து, டி20 பார்மெட்டில் தனது இடத்தை உறுதி செய்தார். தற்போது, சூர்யவன்ஷியும் அதிரடியாக சதம் அடித்து, டி20 பார்மெட்டில் தனது இடத்தை தக்கவைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஷ்ரேயஸ் ஐயருக்கும் சவால்: இந்திய டி20 அணியை, இதுவரை 7 போட்டிகளில் வழிநடத்தியுள்ள ஷ்ரேயஸ் ஐயர், ஒரு வெற்றியைக் கூட பெற்றுத் தரவில்லை. இதனால், ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், ஷ்ரேயஸ் ஐயருக்கு மிக முக்கியமான தொடராக இருக்கிறது. இதில், 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றுகொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஷ்ரேயஸ் ஐயர் இருக்கிறார்.
மேலும், பந்துவீச்சு படையில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்க உள்ளது. அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இல்லாத காரணத்தினால், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் வீரர் பிரின்ஸ் யாதவ், குஜராத் டைடன்ஸின் அசோக் சர்மா, லக்னோ அணியின் மயங்க் யாதவ் ஆகியோர், இத்தொடரில் திறமையை நிரூபித்தால், டி20 பார்மெட்டில் ரெகுலராக இடம் பிடிக்க முடியும்.
குறிப்பாக, அசோக் சர்மா மற்றும் மயங்க் யாதவ் ஆகியோரால் தொடர்ச்சியாக 150+ வேகத்தில் பந்துவீச முடியும் என்பதால், இருவர் மீதும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும், ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், ஷிவம் துபேவுக்கு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இடம் கிடைத்துள்ளது. இதிலும், ஷிவம் துபே சொதப்பினால், அது துபேவுக்கு பெரிய பின்னடைவாக அமையும். இதனால், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், துபேவுக்கும் மிகமுக்கியமானதாக இருக்கிறது.
இந்திய உத்தேச 11 அணி : ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, திலக் வர்மா (துணைக் கேப்டன்), இஷான் கிஷன், ஷிவம் துபே, ரிங்கு சிங், ஹர்ஷ் துபே, பிரின்ஸ் யாதவ், அசோக் சர்மா, மயங்க் யாதவ்.
அட்டவணை என்ன? இரு அணிகளுக்கும் இடையிலான, முதல் டி20 போட்டி, ஜூலை 23ஆம் தேதி நடைபெறும். அடுத்து, கடைசி இரண்டு போட்டிகள் ஜூலை 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறும். மூன்று போட்டிகளும் ஹராரே மைதானத்தில், இந்திய நேரப்படி 4:30 மணிக்கு துவங்கும். இத்தொடரை, ஜீ தொலைக்காட்சியின், யூனிட்8 தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பு செய்ய உள்ளது.
