கல் குவாரி விதிமீறல் குற்றச்சாட்டில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை: அமைச்சர் விக்னேஷ் உறுதி

கிணத்துக்கடவு: ”யார் தவறு செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,” என, அமைச்சர் விக்னேஷ் உறுதி அளித்தார்.

கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., அலுவலகம் வந்த, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ், நிருபர்களிடம் கூறியதாவது:

கல்குவாரி விதிமீறலுக்கு எதிராக, நெ.10.முத்தூர் கிராமத்தில் விவசாயி ஒருவர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது குறித்த தகவல், தற்போது தான் கிடைத்தது. இது குறித்து முறையான விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும். யார் தவறு செய்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தரம் மற்றும் மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது உள்ள பல டாஸ்மாக் மதுக்கடைகளின் முன்பாக, குப்பை குவிந்து காட்சியளிப்பதுடன், கடை முன் சிலர் படுத்து உறங்குவதும் நடக்கிறது. இதை சரி செய்வதற்காக, டாஸ்மாக் மதுக்கடைக்கு பதில், ‘ரெஸ்ட்ரோபார்’ ஆக மாற்றுவது, தனியாருக்கு கொடுப்பது, முழுவதுமாக டாஸ்மாக்கை அகற்றுவது உள்ளிட்டவை கலந்துரையாடலில் உள்ளது. கூடிய விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

அப்போது, ‘ஜனநாயகன்’ படம் வெளியாவதால் டிக்கெட்டை கூடுதல் விலைக்கு, த.வெ.க.,வை சேர்ந்த சிலர் விற்பனை செய்வது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, ”கட்சியில் உள்ள நபர் யாராக இருந்தாலும், இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். யார் தவறு செய்தாலும் தவறு தான். தவறு செய்த நபர் பெரிய பொறுப்பில் இருந்தாலும் உடனடியாக நீக்கப்படுவர்,” என்றார்.

கடந்த ஆட்சியில் டாஸ்மாக் முறைகேடுகள் விரைவில் அறிவிப்போம்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: போதை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் மாநிலம் முழுவதும் தீவிர சோதனைகள் நடந்து வருகின்றன. இதுவரை, 3,579 கிலோ கஞ்சா, 27 கிலோ பிற போதைப்பொருட் கள், ஒரு லட்சம் போதை மாத்திரை கள், ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
த.வெ.க., அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 2,892 வழக்குகள் பதிவு செய்து, 3,845 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக் கடைகளில், 10 ரூபாய் கூடுதல் வசூல் பல இடங்களில் குறைந்துள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண, வரும் 27ம் தேதிக்குப் பின், கூடுதல் நடவடிக்கை அறிவிக்கப்படும். கடந்த ஆட்சியில், ‘பார்ட்டி பண்ட்’ என்ற பெயரில் நடந்த ஊழலை வெளிக்கொண்டு வந்ததை போலவே, 10 ரூபாய் வசூல் தொடர்பான விபரங்களும் விரைவில் வெளிவரும்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு, நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பார்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் செயல்பாடுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ரெஸ்ட்ரோ பார் தொடர்பான தகவல் வெளியாகி, டாஸ்மாக்கை தனியார்மயமாக்க போவதாக வதந்தி பரவி வருகிறது.
மது கொள்முதலில் அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும். கோவை வெள்ளலுார் ஒருங்கிணைந்த பஸ் நிலைய பணிகள் விரைவில் தொடங்கும். வெள்ளலுார் குப்பைக் கிடங்கு பிரச்னைக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Source link