விழுப்புரத்தைச் சேர்ந்த வேங்கடபதி வேலாயுதம், 720-க்கு 705 மதிப்பெண் பெற்று தமிழகத்தில் முதல் இடத்தையும், நாட்டின் தரவரிசை பட்டியலில் 12-வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் நீட் தேர்வில் 245 மதிப்பெண்கள் பெற்று முதல்முறையாக தேர்ச்சி பெற்று சத்தமில்லாமல் சாதனை படைத்துள்ளார்.
கல்வி வளங்கள் குறைந்த தொலைதூர பழங்குடியின கிராமத்தில் பிறந்த ஏற்காடு குண்டூரைச் சேர்ந்த ஈ. நிவேதா, பல்வேறு தடைகளைத் தாண்டி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இப்பகுதியிலிருந்து இச்சாதனையைப் படைத்த முதல் மாணவி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
நிவேதா தனது முதல் முயற்சியிலேயே 720-க்கு 245 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். அதாவது நீட் தேர்வு நடைமுறை தொடங்கப்பட்ட பின்னர் ஏற்காடு மலைவாழ் கிராமங்களில் இதுவரை யாரும் தேர்ச்சி பெறாத நிலையில், குண்டூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 18 மலைவாழ் பழங்குடியின கிராமங்களிலிருந்து தேசிய அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் மாணவி இவரே.
