அதேபோல் அதிமுகவில் எம்எல்ஏ-வாவாக இருந்து சமீபத்தில் திமுகவில் ஐக்கியமான மன்னர் வம்சத்தின் கார்த்திக் தொண்டைமானும் சீட் கிடைக்கும் எனக் காத்திருக்கிறார்.
புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன் எப்படியும் இந்த முறை தேர்தலில் குதிக்காமல் விடுவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டு சீட் வாங்கும் முயற்சியில் இருக்கிறார். அதேபோல் வடக்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளரும் பாரம்பரிய திமுக குடும்பத்து உறுப்பினருமான டாக்டர் மு.க.முத்துக்கருப்பனும் முன்னணி ரேஸில் இருக்கிறார்.
முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் மாவட்டச் செயலாளருமான பெரியண்ணன் அரசும், அவருடைய மூத்த மகள் மருத்துவர் அபிநயா அரசும் விருப்ப மனு தாக்கல் செய்து தொகுதிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளனர். புதுக்கோட்டை பெரியண்ணன் குடும்பம் என்ற முத்திரை மேலிடத்திடமிருந்து சீட்டைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
இப்படி விருப்ப மனுக் களத்தில் முக்கியமானவர்களில் அறிவாலாயம் யாரை டிக் அடிக்கப் போகிறது என்பதுதான் தெரியவில்லை.
இவர்கள் தவிர, மாநகராட்சித் தலைவியான மேயர் திலகவதி செந்திலும், அவருடைய மகனும் அமைச்சர் கே.என்.நேருவின் ஆசீர்வாதத்தோடு ரேஸில் குதித்துள்ளனர்.
அதிமுகவில், எம்.பி. தேர்தலில் தோற்றாலும் சோர்ந்து போகாமல், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவோடு ப.கருப்பையா சீட்டுக்கு மல்லுக்கட்டுகிறார். இவர்களுடன் பெரிய அளவில் அறிமுகம் இல்லாத எம்.ஜி.ஆர்.மன்ற வடக்கு மாவட்டச் செயலாளர் தொழிலதிபர் பழனிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. நெடுஞ்செழியன் ஆகியோருடன் இன்னும் சில இஸ்லாமியப் பிரமுகர்களும் ‘இரட்டை இலை’க்காக தவம் கிடக்கிறார்கள்
இறுதிப்பட்டியலில் யார் இடம் பெறப்போகிறார்கள் என்பது விரைவில் தெரிந்துவிடும்.
ஒருவேளை கூட்டணியில் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால் அக்கட்சியின் மேற்கு மாவட்டத்தலைவர் என்.ராமச்சந்திரன் முன்னாள் அமைச்சரின் ஆசியுடன் எளிதில் கைப்பற்ற ஆயத்த நிலையில் இருந்து வருகிறார்.
த.வெ.க மாவட்டச் செயலாளர் பர்வேஸ், “எனக்கு சீட் கன்பார்ம்” என விசில் அடித்து வேலையைத் தொடங்கிவிட, நாம் தமிழர் கட்சியோ அதிரடியாகப் பொறியாளர் எழிலரசியை வேட்பாளராகவே அறிவித்து ‘ஆல் தி பெஸ்ட்’ சொல்லிவிட்டது. புதுக்கோட்டை தொகுதியில் தவெக பர்வேஸ் போட்டியிட்டால் கணிசமான வாக்குகளைப் பிரிக்க நிறைய வாய்ப்பிருக்கிறது.
புதுக்கோட்டையைப் பொறுத்தவரை சிட்டிங் எம்.எல்.ஏ முத்துராஜா மீது பெரிய அதிருப்தி இல்லை என்பது தி.மு.க-வுக்குப் பெரிய நிம்மதி. ஆனால், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளும், ஆளுங்கட்சிக்கு எதிரான பொதுவான அதிருப்தியும் ஆங்காங்கே எட்டிப் பார்க்கின்றன.
தற்போதைய நிலவரப்படி கூட்டணி பலம், மகளிர் உரிமைத் தொகை, சிட்டிங் எம்எல்ஏவின் திருப்தியான செயல்பாடுகள் தி.மு.க-வை முன்னிலையில் வைத்திருக்கிறது. ஆனால், அ.தி.மு.க-வின் வைட்டமின் பலம் மற்றும் த.வெ.க, நா.த.க. பிரிக்கும் இளசுகளின் ஓட்டுகள் கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’ வைக்கலாம்.
‘சமஸ்தானம்’ யார் கையில்? பொறுத்திருந்து பார்ப்போம்..!
