சென்னை: மாணவர்கள் அறவழியில் போராடினால் ஆதரிப்போம்; சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள பிரசிடென்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ‘நீர் எழில் பள்ளி’ திட்டத்தை அமைச்சர் ராஜ்மோகன் துவங்கி வைத்தார். பிறகு நிருபர்களிடம் ராஜ்மோகன் கூறியதாவது: மாணவர்களின் அறவழி போராட்டம், அமைதியான போராட்டத்தை ஆதரிக்கிறோம்.
இதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. உரிய அனுமதி பெற்று மாணவர்கள் அறவழியில் போராடினால் பிரச்னை இல்லை. திடீரென தூண்டுதல் காரணமாக போராட்டம் நடத்தினால் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
சாதாரண மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் போராட்டம் நடத்தப்பட்டதால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை. நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. நீட் ஒழிப்பே நிரந்தர தீர்வு என்பது தான் தவெக அரசின் நிலைப்பாடு.
டில்லியில் ஜனநாயக முறையில் போராட்டம் நடைபெறுகிறது. மாணவர்களின் போராட்டத்திற்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு வர வேண்டும். இவ்வாறு ராஜ்மோகன் கூறினார்.
