சென்னை: போராட்டம் நடத்துபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜ தலைமையிலான அரசு தாமதம் செய்தது ஏன் என வீ த லீடர்ஸ் அமைப்பின் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:நாடு முழுவதும் மாணவர் சேர்க்கையில் ஒரு சீரான தன்மையை கொண்டு வந்ததாலும், பின்தங்கிய பின்னணி கொண்ட மாணவர்களின் மருத்துவ கல்வி எனும் கனவு நனவாக்கிக் கொள்ள உண்மையான வாய்ப்புகளை வழங்கியதாலும் கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்தேன். கடந்த 5 ஆண்டுகளில் 3 முறை நீட் தேர்வு வினாத்தாள் கசிந்துள்ளது.
சமமான நிலைப்பாட்டைக் கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு தோல்வி அடைந்து கொண்டிருந்த நிலையில், மீண்டும் ஒரு முறை தேர்வு எழுத வேண்டியது மாணவர்கள் மீது எத்தகைய அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கும் என எண்ணிப் பாருங்கள். இதற்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை.
போராட்டம் என்பது ஜனநாயகத்தில் அடிப்படை உரிமை. ஆனால், இங்கு முக்கியமான கேள்வி என்பது, போராட்டம் நடத்துபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜ தலைமையிலான அரசு ஏன் தாமதம் செய்தது? போராட்டம் பெரிய அளவில் மாறும் வரை அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை ஏன் துவங்கப்படவில்லை? மாணவர்கள் காக்க வைக்கப்பட்டது ஏன்?மாணவர்கள் மற்றும் போராட்டத்தை முன்னெடுத்து சென்றவர்களுக்கும் பொறுப்பு உள்ளது.
பிரச்னைகளுக்கு உரிய விவகாரங்களுக்கு தீர்வு காணும் வகையில், அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்தவும், வெளிப்படைத்தன்மையை கடைபிடிப்பதுடன், விரைவான மற்றும் தகுந்த நடவடிக்கைகளை பாஜ அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.
