ஹார்முஸ் ஆழ்கடல் கேபிள்களுக்கு அச்சுறுத்தல்; உலகளவில் இணைய சேவை முடங்கும் அபாயம்

புதுடில்லி: அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் செங்கடலில் பதிக்கப்பட்டுள்ள இணைய கேபிள்கள் தாக்கப்பட்டால், இந்தியா உள்பட பல உலக நாடுகளில் இணையசேவை பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் போர் 3வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தப் போரில் அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்க ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. இதனால், கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டு, உலக நாடுகளை இந்தப் போரின் பக்கம் திரும்பச் செய்தது.

இந்த சூழலில், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடா உள்ளிட்ட பிராந்திய நாடுகளுக்கு மற்றொரு அதிர்ச்சி விஷயம் காத்திருக்கிறது. அமெரிக்காவுடனான இந்தப் போர் 2வது கட்டத்திற்கு செல்லும் பட்சத்தில், ஹார்முஸ் ஜலசந்தியில் கடலுக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள இணைய கேபிள்களையும் ஈரான் துண்டிக்குமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.

உலகளவில் இணைய சேவையை வழங்கும் ‘பைபர் ஆப்டிக்’ கேபிள்கள் ஹார்முஸ் மற்றும் செங்கடலின் பாப் எல்மாண்டேப் வழியாகச் செல்கின்றன. செங்கடல் வழியாக 17 கேபிள்களும், ஹார்முஸ் வழியாக ஏஏஇ-1, பால்கன் உள்ளிட்ட முக்கிய கேபிள்களும் செல்கின்றன. பாரசீக வளைகுடாவில் உள்ள டாடா-டிஜிஎன் போன்ற கேபிள்கள் இந்தியாவின் வெளிநாட்டு தரவு தொடர்புகளுக்கு முதுகெலும்பாக உள்ளன. இவை பாதிக்கப்பட்டால் இந்தியாவில் இணைய வேகம் பெருமளவு குறையும்.

அமேசான், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவில் கோடிக்கணக்கான ரூபாய்களை முதலீடு செய்து தரவு மையங்களை உருவாக்கியுள்ளன. இந்தக் கேபிள்கள் துண்டிக்கப்பட்டாலோ, பழுது ஏற்பட்டாலோ, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை இணைக்கும் இந்த தரவு மையங்களின் செயல்பாடு முடங்கும். வங்கிகள், பங்குச் சந்தைகள், மருத்துவமனைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் சேவைகள் அடியோடு பாதிக்கப்படும்.

கடந்த 2024ல் ஹவுதி பயங்கரவாத அமைப்பினரின் தாக்குதலால் செங்கடலில் கேபிள்கள் சேதமடைந்தபோது ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் இணைய வேகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தற்போது ஹார்முஸ் மற்றும் செங்கடலில் பதிக்கப்பட்டுள்ள கேபிள்கள் சேதமடைந்தால், உலகளவில் இணையசேவை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Source link