Post Office Cheque Book Request,போஸ்ட் ஆபீஸ் செக் புக் இனி உடனே கிடைக்கும் – வீட்டில் இருந்தே எளிதாக விண்ணப்பிக்கலாம் – apply for a post office savings account personalized cheque book through net banking

வீட்டில் இருந்தபடியே போன் மூலமாக மிக எளிதாக தபால் நிலைய காசோலைப் புத்தகத்துக்கு விண்ணப்பிக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. அதை எப்படி பயன்படுத்துவது என்று இங்கே பார்க்கலாம்.

தபால் நிலைய சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்திய தபால் துறை ஒரு முக்கியமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி, காசோலை புத்தகத்தைப் (cheque book) பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் தபால் நிலையத்துக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தபால் துறையின் அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, இணைய வங்கிச் சேவை (net banking) மூலம் காசோலை புத்தகத்திற்கான கோரிக்கையை ஆன்லைனில் சமர்ப்பிக்கும் வசதி இப்போது வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சேவை ஜூலை 18 முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய முயற்சி தபால் துறையின் இணைய வங்கிச் சேவையைப் பயன்படுத்தும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தபால் துறையின் முக்கிய முடிவு!

இந்திய தபால் துறை சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கான தனிப்பயனாக்கப்பட்ட காசோலை புத்தக வசதியை முதன்முதலில் மே 8ஆம் தேதியிட்ட உத்தரவின் மூலம் அறிமுகப்படுத்தியது. இருப்பினும், அக்காலத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் காசோலை புத்தகத்தைக் கோருவதற்கு தபால் நிலைய கவுண்டருக்கு நேரில் செல்ல வேண்டியிருந்தது. இப்போது, அந்த பழைய முறையை மாற்றி, இ-பேங்கிங் அல்லது இணைய வங்கிச் சேவை தளத்துடன் இச்சேவையை தபால் துறை இணைத்துள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் வீடு அல்லது அலுவலகத்திலிருந்தே கணினி அல்லது மொபைல் போனைப் பயன்படுத்தி, இணைய வங்கிச் சேவை வழியாக எளிதாக ஆன்லைனில் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்க முடியும்.

தனிப்பயனாக்கப்பட்ட காசோலை புத்தகத்தின் சிறப்பம்சங்கள்!

இந்தத் தனிப்பயனாக்கப்பட்ட காசோலை புத்தகத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் காசோலைத் தாள்களில் முன்பே அச்சிடப்பட்டிருக்கும். மேலும், கோரிக்கை நிறைவேற்றப்பட்ட பிறகு காசோலை புத்தகம் முதன்மை கணக்கு வைத்திருப்பவரின் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு எவ்வித கூடுதல் விநியோகக் கட்டணமும் இல்லாமல் இலவசமாக அனுப்பி வைக்கப்படும். இதற்காக வாடிக்கையாளர்களிடம் கூடுதல் விநியோகக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. இந்த டிஜிட்டல் முயற்சி வாடிக்கையாளர்களின் நேரத்தை பெருமளவு மிச்சப்படுத்துவதுடன், அவர்களுக்குச் சிறந்த வங்கிச் சேவை அனுபவத்தையும் வழங்கும் என்று தபால் துறை தெரிவித்துள்ளது.

காசோலைப் புத்தகக் கட்டணங்கள்!

தபால் துறை காசோலைப் புத்தகக் கட்டணங்களையும் தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு நிதியாண்டில் 10 பக்கங்கள் வரையிலான காசோலைப் புத்தகங்களுக்கு வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது. அதாவது 10 பக்கங்கள் வரை முற்றிலும் இலவசம்தான். ஒரு வாடிக்கையாளருக்கு 10 பக்கங்களுக்கு மேல் உள்ள காசோலைப் புத்தகம் தேவைப்பட்டால் ஒரு காசோலைப் புத்தகத்திற்கு ரூ. 2 கட்டணம் வசூலிக்கப்படும். இந்தக் கட்டணம் கோரிக்கையின் பேரில் வாடிக்கையாளர் தேர்ந்தெடுத்த சேமிப்புக் கணக்கிலிருந்து தானாகவே கழிக்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

காசோலைப் புத்தகத்துக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான செயல்முறை மிகவும் எளிமையானது. முதலில், உங்கள் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உங்கள் இணைய வங்கி கணக்கில் உள்நுழைய வேண்டும்.
அதன் பின்னர், “பொது சேவைகள்” (General Services) பகுதிக்குச் சென்று “சேவைக் கோரிக்கைகள்” (Service Requests) என்பதைக் கிளிக் செய்து, பின்னர் “புதிய கோரிக்கை” (New Request) என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அடுத்து “தனிப்பயனாக்கப்பட்ட காசோலைப் புத்தகக் கோரிக்கை” ( Personalized Cheque Book Request) என்ற விருப்பத்தை நீங்கள் காண்பீர்கள். அதை கிளிக் செய்ய வேண்டும்.
அடுத்து, “Operation Type” என்பதன் கீழ் “Request Cheque Book” என்பதைத் தேர்ந்தெடுத்து, “செல்” பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
தேவைப்பட்டால் கட்டணங்கள் கழிக்கப்படக்கூடிய உங்கள் சேமிப்புக் கணக்கு எண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படித்து, உறுதிப்படுத்தல் சரிபார்ப்புப் பெட்டியில் குறியிட்டு “Submit Online” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
சமர்ப்பித்தவுடன் கணக்கு வைத்திருப்பவரின் பெயர், விநியோக முகவரி, கணக்கு வகை மற்றும் பதிவுசெய்யப்பட்ட கைபேசி எண் ஆகியவற்றைக் காண்பிக்கும் ஒரு உறுதிப்படுத்தல் பக்கம் திறக்கும்.
இறுதியாக, உங்கள் கோரிக்கையை உறுதிப்படுத்த உங்கள் பரிவர்த்தனை கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். அதன் பிறகு உங்கள் கோரிக்கை வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்படும்.

Source link