“கொண்டாட்டத்தில் திளைக்கும் புதிய நீரோ அரசுக்குக் கடும் கண்டனம்”

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான விஜய் நடித்த கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ பல்வேறு பிரச்சனைகளைத் தாண்டி ஒரு வழியாக இன்று (23.07.2026) உலகமெங்கும் வெளியாகியுள்ளது. முதல்வராக முதல் படம், சினிமாவில் கடைசி படம் என்ற சூழ்நிலையில் வெளியாகியுள்ளதால் விஜய்யின் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் படத்தைத் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். வழக்கம் போல் திரையரங்கில் பேனர், பட்டாசு, டிஜே கச்சேரி என நேற்று (22.07.2026) இரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே முதல்வர் விஜய் நேற்று இரவு சென்னை அடையாறு தாகூர் திரைப்பட கல்லூரியில் படம் பார்த்து மகிழ்ந்தார். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது பெண்ணின் கால் விரலை எலிகள் கடித்துக் குதறியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளை இன்றைய ஆட்சி எப்படி வைத்திருக்கிறது என்பதற்கு இந்த செய்தியே சாட்சி. அரசை நம்பி சிகிச்சை பெற வந்து, எலி கடித்து கால் விரல் இழந்துள்ள அந்த பெண்ணிற்கு என்ன பதில் வைத்துள்ளது இன்றைய தவெக பொய்க்கால் குதிரை அரசு?.

இப்படி மக்கள் திண்டாடிக் கொண்டிருக்க, இத்துறையின் அமைச்சரோ, ஜனநாயகன் படத்தின் முதல் காட்சி பார்த்து கொண்டாடி செல்ஃபி எடுத்து (Selfie) பதிவிட்டுக் கொண்டிருக்கிறார். அவர் மட்டுமல்ல, இன்றைய தினம் முதல்வர் முதல், அமைச்சர்கள் வரை அனைவரும் படம் பார்க்க “லீவு” போட்டிருப்பதாக வேறு செய்திகள் வருகின்றன. நாடும் நாட்டு மக்களும் எக்கேடாய்ப் போனால் என்ன? என்று “பிளாஸ்ட்டு பிளாஸ்டு (Blastu Blastu)” கொண்டாடத்தில் திளைக்கும் புதிய நீரோ ( Nero) அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், அவருக்கான இழப்பீடும் வழங்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Source link