இதனிடையே, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் மீது காவல்துறையினர் வன்முறைச் சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர். அதே நேரத்தில், போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள இளம் பெண்கள் மற்றும் மாணவிகளிடம் காவல்துறையினர் தவறான சீண்டல்களில் ஈடுபடும் வீடியோக்களும் சமூக வலத்தளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதனால், டெல்லியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக, ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. இருப்பினும், மாணவர்களும், இளைஞர்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, இந்த போராட்டத்தைக் கலைக்க பாஜக தங்களது ஆட்களை உள்ளே அனுப்பி, போராட்ட களத்தில் வன்முறையைத் தூண்டுவதாக அபிஜித் தீப்கே தெரிவித்திருந்தார். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தேசியப் பாதுகாப்பது சட்டத்தைப் பயன்படுத்த டெல்லி துணை நிலை ஆளுநர் தரண்ஜித் சிங் சந்து காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த தேசியப் பாதுகாப்பது சட்டத்தின் கீழ் கைது செய்தால் விசாரணையின்றி ஒரு ஆண்டு சிறையில் வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, காவல்துறையினர் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் மற்றும் தடியடி மூலமாகக் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். இருப்பினும், தொடர்ந்து போராட்டம் வலுவடைந்து வருகிறது. இந்நிலையில், டெல்லியின் துணை நிலை ஆளுநர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், டெல்லியில் மேலும் பதற்றம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அக்டோபர் 18 வரை டெல்லி காவல் ஆணையருக்குத் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இளைஞர்களைக் கைது செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
