புதுடில்லி :
உர தயாரிப்பு நிறுவனமான ‘இப்கோ’ உருவாக்கி உள்ள ‘நானோ என்.பி.கே.,’ திரவ உரம் மற்றும் குறுணை உரங்களை தயாரித்து விற்பனை செய்ய, அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இதன் வாயிலாக, விவசாயத்தில் ரசாயன உரங்களின் பயன்பாடு குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது. இப்கோ, ஏற்கனவே நானோ யூரியா மற்றும் நானோ டி.ஏ.பி., உரங்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், அந்நிறுவனத்தால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட திரவ வடிவிலான நானோ என்.பி.கே., உரத்தையும், குறுணை வடிவிலான நானோ என்.பி.கே., உரத்தையும் தயாரித்து, விற்பனை செய்ய எப்.சி.ஓ., எனப்படும் உர கட்டுப்பாட்டு ஆணையம் தற்போது ஒப்புதல் அளித்து உள்ளது.
இது குறித்து இப்கோ வெளியிட்டுள்ள அறிக்கை:
நானோ என்.பி.கே., திரவ உரம் இலைவழி ஊட்டத்துக்கும், குறுணை உரம் மண் மற்றும் வேர் வழி ஊட்டத்துக்கும் ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய வகை உரங்கள் மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் பயிர் உற்பத்தி திறனை அதிகரிக்க உதவும்.
இந்த உரங்களுக்கு அரசின் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது, விவசாயிகளுக்கான சேவையில், முக்கிய திருப்பு முனையாகும்.
சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக உர வினியோக தொடரில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த உள்நாட்டு தயாரிப்புகள் நம் நாட்டின் இறக்குமதி தேவையை குறைக்கும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
