டெஹ்ரான்: இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி

டெஹ்ரான்: இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிலையங்களை குறிவைத்து ஈரான் நேற்று நடத்திய கடும் தாக்குதல் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 6 சதவீதம் உயர்ந்து பீப்பாய் 114 அமெரிக்க டாலரை எட்டியது.

மேற்காசிய நாடான ஈரான் மீது, அணுசக்தி அச்சுறுத்தல் என்ற காரணத்தை கூறி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பிப்ரவரி 28ல் தாக்குதலை துவங்கியது. இந்த போர் மூன்று வாரங்களாக நீடிக்கின்றன.

பதிலுக்கு இஸ்ரேல் மற்றும் மேற்காசிய பிராந்தியங்களில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் கச்சா எண்ணெய் நிலையங்களை ஈரான் தாக்குகிறது.

இயற்கை எரிவாயு

இந்நிலையில், ஈரானின் முக்கிய இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையமான சவுத் பார்ஸ் மீது, இஸ்ரேல் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது.

இது உலகின் மிகப்பெரிய எல்.என்.ஜி., எனப்படும் இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையங்களில் ஒன்று. ஈரானின் பொருளாதார ஆதாரங்களை பலவீனப்படுத்தும் நோக்கத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆத்திரமடைந்த ஈரான் நேற்று பதில் தாக்குதலை தீவிரப்படுத்தியது. கத்தாரில் உள்ள ராஸ் லபான் இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையத்தை, ஈரானின் ஏவுகணை தாக்கியதில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதனால் உற்பத்தி தடைபட்டுள்ளது.

இதுகுறித்து கத்தார் எரிசக்தி அமைச்சர் சாத் அல் காபி கூறுகையில், ”ஈரானின் இந்த தாக்குதல் கத்தாரின் எல்.என்.ஜி., ஏற்றுமதி திறனில் 17 சதவீதத்தை அழித்துள்ளது. இதனால், ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைக்கான வினியோகம் பாதிக்கப்படும்,” என்றார்.

இதே போல் சவுதி அரேபியாவின் சாம்ரெப் கச்சா எண்ணெய் உற்பத்தி நிலையம், குவைத்தில் உள்ள மினா அல் அகமதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், ஐக்கிய அரபு எமிரேட்சின் ஹப்சான் இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையம் ஆகியவையும் ஈரானால் தாக்கப்பட்டன.

இந்த தாக்குதல்கள் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன. ப்ரென்ட் கச்சா எண்ணெய் விலை 6 சதவீதம் அதிகரித்து ஒரு பேரல் 114 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இது பிப்ரவரி 28ம் தேதியுடன் ஒப்பிடுகையில் 57 சதவீதம் உயர்வு.

இதே போல் ஆசிய சந்தையில் இயற்கை எரிவாயு விலை இரட்டிப்பாகி உள்ளது.

நம் நாடு எரிவாயு தேவையில் பெரும்பாலும் இறக்குமதியை சார்ந்துள்ளது. இதில் கத்தார் மிகப்பெரிய வினியோகஸ்தராக இருந்து வருகிறது.

இந்தியாவுக்கு பாதிப்பா?

வர்த்தக தரவுகளின் படி 2024ல் நம் நாடு 2.7 கோடி டன் எரிவாயுவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது. அதில், 47 சதவீதமான 1.2 கோடி டன் அளவு எரிவாயு கத்தாரில் இருந்து பெறப்பட்டது.

தற்போது அங்கு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் செயல்பட சில வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்படுகிறது.

இதனால், இந்தியாவுக்கான எரிவாயு வினியோகம் குறையக்கூடும். இயற்கை எரிவாயு மற்றும் சி.என்.ஜி., பயன்படுத்தும் தொழில் துறைகள், வாகனங்கள், வீடுகள் மாற்று எரி பொருளை பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகலாம் என, நிபுணர்கள் கூறுகின்றனர்.

Source link