தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை: டெல்லி போலீஸ் கமிஷனருக்கு அதிகாரம்

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன்னெச்சரிக்கை தடுப்புக் காவலில் வைப்பதற்கான அதிகாரத்தை டெல்லி காவல்துறை ஆணையருக்கு டெல்லி அரசு வழங்கியுள்ளது. ஜூலை 19 முதல் அக்டோபர் 18 வரையிலான மூன்று மாத காலத்திற்கு இந்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ அமைப்பினரின் தற்போதைய போராட்டங்களுக்கும் இந்த உத்தரவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், இது ஒரு வழக்கமான நிர்வாக நடவடிக்கை மட்டுமே என்றும் டெல்லி காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

தேசிய பாதுகாப்புச் சட்டம், 1980-ன் படி, நாட்டின் பாதுகாப்பு, பொது அமைதி அல்லது அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் மற்றும் சேவைகளைப் பராமரித்தல் ஆகியவற்றிற்குப் பாதகமான முறையில் செயல்படும் நபர்களை முன்எச்சரிக்கை அடிப்படையில் கைது செய்து காவலில் வைக்க முடியும். சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உட்பட்டு, உடனடி குற்றவியல் விசாரணை ஏதுமின்றி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நபர்களைக் காவலில் வைக்க இச்சட்டம் அனுமதிக்கிறது.

டெல்லி அரசின் உள்துறை (போலீஸ்-II) வெளியிட்ட அறிவிப்பின்படி, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 3(2)-ன் கீழ் காவலில் வைக்கும் அதிகாரியாக டெல்லி காவல்துறை ஆணையரை நியமிக்க துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த அதிகாரம் அக்டோபர் 18 வரை அமலில் இருக்கும். டெல்லி அரசின் உள்துறை துணைச் செயலாளர் ரமேஷ் குமார் கையொப்பமிட்டுள்ள இந்த உத்தரவு, தேசிய பாதுகாப்புச் சட்டம் 1980-ன் பிரிவு 3(3) மற்றும் பிரிவு 2(e)-ன் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு டெல்லி முழுவதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை; புதிய கட்டுப்பாடுகள் எதையும் விதிக்கவில்லை. மாறாக, சட்டப்பூர்வத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில், குறிப்பிட்ட காலத்திற்குள் முன்எச்சரிக்கை தடுப்புக்காவல் அதிகாரங்களைப் பயன்படுத்த மட்டுமே காவல்துறை ஆணையருக்கு அதிகாரம் அளிக்கிறது.

இது குறித்து வியாழக்கிழமை (ஜூலை 23) அறிக்கை ஒன்றை வெளியிட்ட டெல்லி காவல்துறை, இந்த அறிவிப்பானது ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் வழக்கமாக மேற்கொள்ளப்படும் அதிகார நீட்டிப்புதான் என்று தெரிவித்துள்ளது.

தற்போதைய புதுப்பித்தல் உத்தரவு ஜூலை 15 அன்றே பிறப்பிக்கப்பட்டு, ஜூலை 19 முதல் அக்டோபர் 18 வரையிலான காலத்திற்குப் பொருந்தும் வகையில் வழங்கப்பட்டது என்றும், மாணவர்கள் மற்றும் CJP அமைப்பினரின் போராட்டங்கள் தொடங்குவதற்கு முன்பே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது என்றும் காவல்துறை விளக்கியுள்ளது. மேலும், தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களைக் குறிப்பிட்டு சிறப்பு கோரிக்கை எதுவும் வைக்கப்படவில்லை என்றும், இது வழக்கமான நிர்வாக நடைமுறை என்பதால் இந்த உத்தரவைத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது என்றும் காவல்துறை கூறியுள்ளது.

Source link