சட்டசபையில் கவனமாக செயல்படணும்; தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு ஸ்டாலின் உத்தரவு

– நமது நிருபர் –

‘சட்டசபையில், பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, கவனமாக செயல்பட வேண்டும்,’ என, தி.மு.க., – எம்.எல்.ஏ,க்களுக்கு, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டசபையில், பட்ஜெட் கூட்டத் தொடரில், தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து, அவர்களுக்கான ‘வாட்ஸாப் குரூப்’பில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் சில உத்தரவுகளை பதிவிட்டுள்ளார்.

இது குறித்து, எம்.எல்.ஏ.,க்கள் சிலர் கூறியதாவது: முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசு பொறுப்பேற்ற பின், முதல் பட்ஜெட், வரும் ஆக.,5ல் சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. தி.மு.க., அரசு செயல்படுத்திய திட்டங்களையே, பெயர் மாற்றி, தொடர்ந்து செயல்படுத்த, த.வெ.க., அரசு திட்டமிட்டுள்ளது.

குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2,500 ரூபாய்; ஆண்டுக்கு 6 இலவச காஸ் சிலிண்டர்கள்; பெண்கள் திருமணத்திற்கு 8 கிராம் தங்கம், பட்டுச் சேலை; கல்விக் கடன் 20 லட்சம் ரூபாய்; குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு; வேலையில்லா பட்டதாரிகளுக்கு 4,000 ரூபாய் போன்ற, த.வெ.க.,வின் தேர்தல் வாக்குறுதிகள், பட்ஜெட்டில் இடம் பெறாவிட்டால், தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்த வேண்டும்.

பட்ஜெட் கூட்ட தொடர், நேரலை செய்யப்பட உள்ளதால், தி.மு.க., அரசின் திட்டங்களை பட்டியலிட்டு, சட்டசபையில் பேச வேண்டும். சட்டம் – ஒழுங்கு பிரச்னை, பாலியல் புகார்கள், போலீசார் தாக்குதலில் மரணம் போன்ற தொடர்பான விவகாரங்களில், த.வெ.க., அரசின் நிர்வாக திறமையின்மையை சுட்டிகாட்டி விவாதிக்க வேண்டும்.

பட்ஜெட்டுக்கு பின், அதில் உள்ள குறைகளை, மக்களிடம் விரிவாக பேச வேண்டும். மேலும், சட்டசபையில் கவனமான செயல்பட வேண்டும் எனவும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link