பங்குச் சந்தையை வேட்டையாடிய 'கரடி': 13 லட்சம் கோடி ரூபாய் 'அவுட்'

இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து மூன்று நாட்களாக நீடித்த உற்சாகம், நேற்று காலை வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்களிலேயே காணாமல் போனது. சென்செக்ஸ் 1,651 புள்ளிகளும்; நிப்டி 504 புள்ளிகளும் சரிந்து, முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தின. வர்த்தக முடிவில், 2,496 புள்ளிகள் சரிந்து சென்செக்ஸ் 74,207 புள்ளிகளிலும், நிப்டி 775 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 23,002 புள்ளிகளிலும் நிறைவடைந்தன. இந்த திடீர் வீழ்ச்சியால், ஒரே நாளில் பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 13 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சரிந்தது. சரிவுக்கான ஆறு முக்கிய காரணங்கள்:Image 1551292 சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரல் 115 டாலரை தாண்டியுள்ளது. இது இந்திய பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கக்கூடும்

2 பங்குச் சந்தையின் துாணாக கருதப்படும் ‘ஹெச்.டி.எப்.சி.,’ வங்கியின் பங்குகள், நேற்று 9 சதவீதம் வரை சரிந்தன. நிப்டியில் 11 சதவீத பங்களிப்பை கொண்டுள்ள இந்த வங்கியின் வீழ்ச்சி, ஒட்டுமொத்த சந்தையையும் அதலபாதாளத்திற்கு தள்ளியது

3 அமெரிக்க பெடரல் வங்கி, வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாமல், தற்போதைய நிலையே நீட்டிப்பதாக அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, அமெரிக்காவின் ‘டவ் ஜோன்ஸ்’ குறியீடு 750 புள்ளிகளுக்கு மேல் சரிந்து, 2026ம் ஆண்டின் மிக குறைந்த அளவை தொட்டது. இது இந்திய சந்தையையும் நிலைகுலைய செய்தது.

4 அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று வருகின்றனர். புதன்கிழமை மட்டும் கிட்டத்தட்ட 2,714 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் விற்றுள்ளனர்.

5 சந்தையின் பதற்றத்தை அளவிடும் ‘இந்தியா வி.ஐ.எக்ஸ்’ குறியீடு, 21.79 சதவீதம் உயர்ந்து, 22.80 நிலையை நேற்று எட்டியது. இது சந்தையில் நிலவும் கடும் அச்சத்தையும், வரவிருக்கும் ஏற்ற இறக்கத்தையும் உறுதிப்படுத்துகிறது.

6 எதிர்மறை செய்திகளை தொடர்ந்து, நேற்று முதலீட்டாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு லாபத்தை வெளியே எடுக்க ஆரம்பித்தனர். இது வீழ்ச்சியின் வேகத்தை அதிகரித்தது.

நிப்டி 50: கடும் சரிவை சந்தித்த பங்குகள்* நிறுவனத்தின் பெயர் பங்கு விலை (ரூபாயில்) வீழ்ச்சி ஸ்ரீராம் பைனான்ஸ் 953.00 -6.71% எட்டர்னல் 229.50 -5.38% ஹெச்.டி.எப்.சி., வங்கி 798.20 -5.32 % பஜாஜ் பைனான்ஸ் 836.70 -4.93% எம் அண்டு எம்., 3,059.80 -4.82% *(19.3.2026 நிலவரப்படி)

அவசரப்பட வேண்டாம் சந்தையின் சரிவு குறித்து பங்குச்சந்தை நிபுணர்கள் கூறியதாவது: சந்தையில் தற்போது நிலவும் நிச்சயமற்ற சூழலில், முதலீட்டாளர்கள் அவசரப்பட்டு பங்குகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும். நிப்டி மீண்டும் 23,450 புள்ளிகளுக்கு மேல் நிலைபெற்றால் மட்டுமே, சந்தை ஏற்றத்தின் போக்குக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரிந்துள்ள சந்தையில், அதிக யூனிட்டுகள் கிடைக்கும் என்பதால், மியூச்சுவல் பண்டு ‘எஸ்.ஐ.பி.,’ முதலீட்டை தொடரலாம். முடிந்தால் முதலீட்டு தொகையை சற்று அதிகரிக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Source link