பழநி: ”தமிழகத்தில் சிறுமிகள் பலாத்காரம், பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது,” என பழநியில் ஹிந்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம்சாட்டினார்.
அவர் கூறியதாவது: காங்., தி.மு.க., பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என போராட்டங்கள் நடத்தி வருகின்றன. பலர் பெட்ரோல், டீசலை வாங்கி ஸ்டாக் வைத்து விடுகிறார்கள். இதனால் தீ விபத்து ஏற்படுகிறது. ஓட்டல்களில் வேண்டும் என்றே காஸ் கிடைக்கவில்லை என விலைவாசியை அதிகரிக்கிறார்கள். டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு என அவதுாறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் சிறுமிகள் கற்பழிப்பு, பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது. திராவிட மாடல் ஆட்சியில் குற்றவாளிகள் அச்சமின்றி செயல்படுகின்றனர். சட்டம், ஒழுங்கு தமிழகத்தில் சீர்கெட்டு உள்ளது. இதனை மறைக்க முதல்வர் ஸ்டாலின் சிறுவர்களை அழைத்து ரீல்ஸ் போட்டுக் கொண்டுள்ளார்.
போதைப்பொருள், சட்டம் ஒழுங்கு பிரச்னையை திசை திருப்பும் வேலையை மே 17 போன்ற இயக்கங்கள் மூலம் செய்து வருகிறார். உலக நாடுகளில் இஸ்லாமியர்கள் அச்சத்தில் உள்ள போது நம் நாட்டில் ரம்ஜான் நோன்பு திறப்பு விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. காவலன் செயலியை பயன்படுத்த வேண்டும் என கூறுகின்றனர். காவலன் செயலியை பயன்படுத்தும் விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்தி தரவில்லை.
ஆன்லைனில் வேட்பு மனு தாக்கல் செய்யும் திட்டத்தை வரவேற்கிறோம். தேர்தல் விதிமுறைகளில் ரூ. 50,000 த்துக்கும் மேல் கொண்டு செல்லக்கூடாது என்பது சாமானியர்களை பாதிக்கிறது.
த.வெ.க., ஓட்டுகள் புதிய வாக்காளர்கள் ஓட்டுக்கள் அ.தி.மு.க., கூட்டணிக்கு வந்து விடக்கூடாது என த.வெ.க., நாம் தமிழர் செய்து வருகின்றன. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி மட்டுமே ஏற்படுத்த முடியும்.
தமிழகத்தில் டாஸ்மாக் எண்ணிக்கை குறைக்கப்படும் எனக்கூறி மனமகிழ் மன்றங்களை திறந்து வருகின்றனர். மது போதைக்கு அடிமை ஆகி குடிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து இளம் விதவைகள் அதிகரித்து வருகிறார்கள் என்றார்.
