த.வெ.க., வேட்பாளர் பட்டியல் ரெடி? மேல்மலையனுாரில் சிறப்பு பூஜை

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், நடிகர் விஜயின் த.வெ.க., தனித்து களமிறங்குகிறது இதற்காக, கட்சியினரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, இரண்டு கட்டங்களாக நேர்காணல் நடத்தப்பட்டது.

பின்னர், வசதியுள்ள வேட்பாளர்களை தேர்வு செய்ய விஜய் முடிவு செய்தார். அதிக செலவு செய்வதாக உறுதியளித்தோருக்கு, வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. மாற்று கட்சிகளில் இருந்து த.வெ.க., வந்தவர்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

இதற்கிடையே, புதுச்சேரி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவங்கி விட்டது. அங்கு, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்., காங்கிரசுடன் இணைந்து தேர்தலை சந்திக்க விஜய் விரும்பி, ரகசிய பேச்சு நடந்தது.

இதையடுத்து, புதுச்சேரி தேர்தலுக்கான த.வெ.க., வேட்பாளர்களை, விஜய் தேர்வு செய்துள்ளார். தமிழகத்தில், முதல் கட்டமாக 100 தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல், வரும் 23ம் தேதி நிறைவடைவதால், வரும் 21 அல்லது 22ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. அதன்பின், தமிழக வேட்பாளர் பட்டியல் வரும் 23ம் தேதி கிருத்திகை அல்லது 24ம் தேதி சஷ்டி திதி நாளில் வெளியிடப்படுகிறது.

இந்நிலையில், கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த், த.வெ.க., வேட்பாளர் பட்டியலை, விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுாரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார். த.வெ.க., தலைமை அலுவலகத்திலும், பட்டியலுக்கு பூஜை செய்யப்பட்டு உள்ளது.

மண்டபத்தை விற்றாரா விஜய்?

த.வெ.க., தலைவர் விஜய்க்கு, சென்னை வடபழனியில், ‘ஜே.எஸ்.மஹால்’ என்ற திருமண மண்டபம் உள்ளது. தன் மகன் ஜேசன் சஞ்சய் பிறந்ததும் கட்டிய மண்டபம் என்பதால், மகன் பெயரில், ‘ஜே.எஸ்.மஹால்’ என பெயர் சூட்டினார். தற்போது, தன் குடும்பத்தை விட்டு பிரிந்து, பனையூர் மற்றும் எம்.ஆர்.சி., நகரில் உள்ள வீடுகளில் விஜய் தனியாக வசித்து வருகிறார். அதனால், அந்த திருமண மண்டபத்தை விஜய் விற்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனநாயகன் பட விற்பனை மற்றும் வசூலை வைத்து, தேர்தல் செலவை சமாளிக்க, விஜய் திட்டமிட்டு இருந்தார். அந்த படம் வெளியாகாததால் பண நெருக்கடிக்கு ஆளாகி, தேர்தல் செலவுக்காக திருமண மண்டபத்தை விஜய் விற்று விட்டதாக கூறப்படுகிறது.

Source link