மும்பை: மஹாராஷ்டிராவில் 6 பெண்கள் உள்பட 11 நக்சல்கள் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர். கடந்த ஓராண்டில் மட்டும் கட்சிரோலி மாவட்டத்தில் 123 நக்சல்கள் சரணடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தாண்டு மார்ச் மாத இறுதிக்குள் இந்தியாவில் நக்சல்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரா மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் கூட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பலர் என்கவுன்டர் செய்யப்பட்டு வலும் நிலையில், ஏராளமானோர் உயிருக்கு பயந்து சரணடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், மஹாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில், 5 மூத்த உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 11 நக்சல்கள் நேற்று (மார்ச் 19) பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தனர். சோனி, புதாரி, சுக்லால் கோக்சா, சாந்தி, யமுனக்கா, கணேஷ் கோவாசி உள்ளிட்டோரும் அடங்குவர். சரணடைந்த இவர்கள் மீது மொத்தம் ரூ. 68 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
