தமிழக முதலமைச்சர் விஜய் நடித்த கடைசி திரைப்படமான ‘ஜன நாயகன்’ நேற்று (ஜூலை 23) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ஏழு மாதங்கள் தாமதத்திற்குப் பிறகு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜய் முழுநேர அரசியலில் கவனம் செலுத்த உள்ளதால், இது அவரது கடைசி திரைப்படமாக அறிவித்திருந்தார். இதனால், தமிழகம் முழுவதும் ரசிகர்கள் திரையரங்குகளில் திரண்டு கொண்டாடினர்.
இந்த கொண்டாட்டங்களுக்கு மத்தியில், தமிழ் சின்னத்திரை நடிகையான ஆனந்தி அஜய் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ‘ஜன நாயகன்’ திரைப்படத்தில் தான் நடித்த அனைத்து காட்சிகளும் இறுதிக் கட்டத்தில் நீக்கப்பட்டதாக அவர் கண்ணீர் மல்க தெரிவித்தது ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது. இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், நான் பல திரைப்படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்திருக்கிநறேன். ஆனால் அந்த காட்சிகள் கட் பண்ணும்போது நான் வருத்தப்பட்டு இல்லை.
அதே சமயம் விஜயுடன் ஜன நாயகன் படம் நான் ரீ-என்டரி ஆன படம். இந்த படத்தில் ரிலீஸ்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காத்திருந்தேன். ஆனால், திரைப்படம் வெளியான நாளிலேயே எனது அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டதாகத் தெரிந்ததும் மிகுந்த மனவேதனை யாக உள்ளது. நான் நடிக்க வந்த காரணமே விஜய் சாருடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று தான். அது என் கனவாக இருந்தது. பெண்களுக்கு முக்கியத்துவம் படம் சூப்பராக இருக்கிறது. எல்லோரும் வந்து பாருங்க.
‘ஜன நாயகன்’ விஜயின் கடைசி திரைப்படம் என அனைவரும் கருதும் நிலையில், இனி அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும். அடுத்து அவர் திரைப்படத்தில் நடித்தார் என்றால், வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த படத்தில் என் காட்சிகள் தளபதியுடன் வரும் என்று எதிர்பார்த்து போனேன் ஆனால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு அதிஷட்டம் இல்லை என பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் பரவியதும், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ஆனந்திக்கு ஆறுதல் தெரிவித்து ஊக்கமளிக்கும் வகையில் பல கருத்துகளை பகிர்ந்தனர். “இதற்குப் பின்னால் நல்ல காரணம் இருக்கும். விரைவில் சிறந்த கதாநாயகி வாய்ப்பு உங்களைத் தேடி வரும்” என்று ஒருவர் பதிவிட்டிருந்தார்.
மற்றொருவர், “மீண்டும் உங்கள் காட்சி நீக்கப்பட்டிருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது. எதிர்காலத்தில் இன்னும் பெரிய திரைப்படங்களிலும் சிறந்த கதாபாத்திரங்களிலும் உங்களை பார்க்க இறைவனை வேண்டுகிறேன்” என்று ஆறுதல் தெரிவித்திருந்தார்.
மேலும், “உங்களின் வலியை புரிந்துகொள்கிறேன். கவலைப்படாதீர்கள். மிகப்பெரிய வாய்ப்பு விரைவில் உங்களை தேடி வரும். உங்கள் நடனத்திற்கே நான் மிகப்பெரிய ரசிகன். நிச்சயம் ஒரு பெரிய படத்தில் உங்களை பார்க்கப் போகிறோம்” என்றும் பலர் உற்சாகம் அளித்தனர்.
