சென்னையில் தவெக-வின் அசுர வளர்ச்சிக்கு மத்தியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இடைத்தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்றம் செல்லுமாறு மூத்த நிர்வாகிகள் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழக அரசியல் களம் அடுத்தகட்ட பரபரப்பை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட வைக்க கட்சியின் மூத்த நிர்வாகிகள் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் உள்ள ஒரு முக்கியத் தொகுதியில் அவரைப் போட்டியிட வைக்கத் திட்டமிடப்பட்டு வரும் வேளையில், அதற்குப் பின்னால் பல அரசியல் கணக்குகளும், பெரும் சவால்களும் நிலவி வருகின்றன.
சென்னை தவெக கோட்டையானதால் திமுகவிற்குள் எழுந்த சந்தேகம்
திமுகவின் பாரம்பரிய கோட்டையாகக் கருதப்படும் சென்னை, அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மிகப்பாரிய அரசியல் மாற்றத்தைச் சந்தித்தது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) சென்னையின் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி, அதனைத் தங்களின் அசைக்க முடியாத கோட்டையாக மாற்றிக்காட்டியுள்ளது.இந்தச் சூழ்நிலையில், சென்னையில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டால் தவெக-வின் பலத்த அலைக்கு மத்தியில் அவரால் எளிதாக வெற்றி பெற முடியுமா, ஒருவேளை பின்னடைவு ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த திமுகவின் எதிர்காலத்தையும், அவரது அரசியல் வாழ்வையும் கேள்விக்குறியாக்கி விடுமே என்ற அச்சம் மற்றும் தயக்கம் திமுகவினரிடையே பரவலாக எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சவாலை ஏற்கும் முன்னாள் அமைச்சர்கள்
நிர்வாகிகளின் இந்தத் தயக்கத்திற்கு மத்தியில், கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் சிலர் தலைமைக்கு அசாத்திய தைரியத்தை அளித்து வருகின்றனர். “தேர்தல் பொறுப்புகளை நாங்கள் முன்னின்று கவனித்துக் கொள்கிறோம், சவாலான சூழ்நிலை இருந்தாலும் தலைவரை நாங்கள் நிச்சயமாகப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம்” என்று திமுக தலைமையிடம் அவர்கள் திட்டவட்டமாக உறுதி அளித்துள்ளனர்.
மூத்த அமைச்சரின் ராஜினாமா சலசலப்பு
இந்த விவகாரத்தில் மற்றொரு அதிர்ச்சிகரமான தகவலும் அரசியல் வட்டாரத்தில் கசிந்துள்ளது. கடந்த தேர்தலில் ஒரு மூத்த அமைச்சரின் தவறான தேர்தல் வியூகங்கள் மற்றும் செயல்பாடுகளால்தான் முன்னாள் முதலமைச்சர் தோல்வியடைய நேர்ந்தது என்ற பரவலான பேச்சு கட்சிக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது.இதற்குக் பரிகாரமாக, அந்த மூத்த அமைச்சர் தனது தற்போதைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனது சொந்தத் தொகுதியிலேயே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைப் போட்டியிடுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைவர் சட்டமன்றத்திற்குச் செல்ல வேண்டும் – நிர்வாகிகளின் ஒற்றை இலக்கு
நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் நீங்கள் கட்டாயம் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் சட்டமன்றத்திற்குள் கம்பீரமாக நுழைந்து மக்கள் குரலை ஒலிக்கச் செய்ய வேண்டும். அதுவே தற்போதைய சூழலில் எங்களுடைய முதன்மை இலக்கு” என்று திமுகவின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் தற்பொழுது ஒருமித்த குரலில் மு.க.ஸ்டாலினிடம் தங்களது விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.
Source link
