சொத்துக்களுக்கு அடையாள அட்டை திட்டம்; தமிழகம் உட்பட 6 மாநிலங்கள் மவுனம்

சென்னை: மத்திய அரசு நிதி அளித்தும், சொத்துக்களுக்கு தனித்த அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதில், தமிழகம் உட்பட ஆறு மாநிலங்கள் மவுனமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

நாடு முழுதும், சொத்து ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்ற, மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.

நடவடிக்கை

அதன்படி, கிராம வாரியாக சொத்துக்கள் குறித்த, டிஜிட்டல் வரைபடங்கள் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. அத்துடன் சொத்து குறித்த உரிமை ஆவண விபரங்களையும், டிஜிட்டல் முறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதை அடிப்படையாக வைத்து, ஒவ்வொரு சொத்துக்கும் பிரத்யேக எண்ணுடன், அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணிகள், மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இல்லாததால், பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சொத்து ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்காக நாடு முழுதும் மொத்தம் உள்ள, 3.38 லட்சம் கிராமங்களில், 3.30 லட்சம் கிராமங்களுக்கு, டிஜிட்டல் வரைபடம் தயாரிப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

டிஜிட்டல் முறை இதில், 1.97 கிராமங்களில், 3.24 கோடி சொத்துக்களுக்கு தனி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேசம், குஜராத், ஹரியானா, கர்நாடகா, ராஜஸ்தான், கோவா, உத்தரகண்ட் போன்ற மாநிலங்கள், அடையாள அட்டை வழங்குவதில் இறுதி கட்டத்தில் உள்ளன.

ஆனால், தமிழகம், தெலுங்கானா, கேரளா, சிக்கிம், அசாம், அருணாச்சல பிரதேசம் மாநிலங்களில், சொத்துக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் முடங்கியுள்ளன.

இதில், தமிழகத்தில் தான் சொத்து ஆவணங்கள், அதிக அளவில் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. ஆனால், தனித்த அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளன.

முந்தைய அரசுகள், இதில் உரிய கொள்கை முடிவு எடுக்காததால், அடையாள அட்டை வழங்கும் பணிகள் முடங்கியுள்ளன. தற்போது வந்துள்ள புதிய அரசு எடுக்கும் முடிவை பொறுத்து, இத்திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பயன் என்ன?

சொத்துக்களுக்கு, பட்டா, பத்திரம் போன்ற ஆவணங்கள் இருக்கும் போது, தனியாக ஒரு அடையாள அட்டை எதற்கு என்ற கருத்து நிலவுகிறது. உண்மையில், பத்திரம் என்பது பரிமாற்றத்தையும், பட்டா என்பது தற்போதைய உரிமையாளர் யார் என்பதையும் மட்டுமே தெளிவுபடுத்துகின்றன. ஆனால், இந்த விபரங்களை அடிப்படையாக வைத்து, அடையாள அட்டை கொடுக்கப்படுகிறது.
இவ்வாறு சொத்துக்களுக்கு தனித்த அடையாள அட்டை கொடுக்கப்பட்டால், பட்டா, பத்திர மாற்றங்கள் ஒருங்கிணைக்கப்படும். சொத்தின் இருப்பிடம், உரிமையாளர் யார் என்பதை தெளிவாக உறுதிப்படுத்த வாய்ப்பு ஏற்படும். உரிமையாளரின் ஆதார் எண் விபரங்களும், இதில் சேர்க்கப்படுவதால், ஒரு நபர் பெயரில் எத்தனை சொத்துக்கள், எந்தெந்த ஊர்களில் இருக்கின்றன என்பது தெரிந்துவிடும்.

Source link