சென்னை மாநகரப் பேருந்தில் பெண் பயணி ஒருவரிடமிருந்து ஏடிஎம் கார்டைத் திருடி, வங்கி கணக்கில் இருந்த மொத்தப் பணத்தையும் நூதன முறையில் சுருட்டிய வழக்கில் சத்யா என்ற கில்லாடி பழைய குற்றவாளியைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
சென்னையில் அரசுப் பேருந்தில் பயணித்த பெண் ஒருவரின் பையிலிருந்து அவரது ஏடிஎம் கார்டு மர்மமான முறையில் திருடு போனது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். திருடப்பட்ட கார்டைப் பயன்படுத்தி பல்வேறு இடங்களில் பணம் எடுக்கப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட ஏடிஎம் மையங்களின் சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தனர். அதில், ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி, ரகசியக் குறியீட்டு எண்ணை உள்ளிட்டுப் பணத்தை எடுக்கும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியிருந்தன.
அந்த நபர் ஏற்கனவே போலீசாரின் குற்றப் பதிவேட்டில் உள்ள சத்யா என்பது உறுதி செய்யப்பட்டது. வாட்ஸ்அப் உள்ளிட்ட தகவல் தொடர்பு வழிகளில் புகைப்படங்களை அனுப்பி தேடிய தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த சத்யாவைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள் தங்களது ஏடிஎம் கார்டுகள் மற்றும் ரகசிய எண்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
