புதுச்சேரி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்ற பா.ஜ.க, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையிலும் பங்கெடுத்தது. அந்தக் கூட்டணி அடுத்து வந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர்ந்தது. ஆனால் அந்தத் தேர்தலில் பா.ஜ.க படுதோல்வியை சந்தித்தது. அதன்பிறகு முதல்வர் ரங்கசாமியிடம் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்கியது. ஆனால் அதற்கு சிறிதும் பிடி கொடுக்காமல் பா.ஜ.க தரப்பை இழுத்தடித்து வந்த முதல்வர் ரங்கசாமி, காரைக்கால் வந்த மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பிறகு `என்.டி.ஏ கூட்டணி தொடர்கிறது” என்று தெரிவித்தார்.

அதன்பிறகு என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களிலும், பா.ஜ.க 14 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவித்தது பா.ஜ.க. அதையடுத்து புதுச்சேரியில் லட்சிய ஜனநாயகக் கட்சி என்று புதிய கட்சியைத் தொடங்கிய `லாட்டரி’ ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை கூட்டணிக்குள் கொண்டு வந்த பா.ஜ.க, அவருக்கு இரண்டு தொகுதிகளை வழங்கவும் முடிவெடுத்தது. ஆனால் என்.டி.ஏ கூட்டணியில் `லாட்டரி’ சார்லஸ் மார்ட்டினின் ல.ஜ.க வரக் கூடாது என்று போர்க்கொடி உயர்த்தியது என்.ஆர்.காங்கிரஸ். ஆனால் ல.ஜ.க எங்கள் கூட்டணியில்தான் இருக்கும் என்று பிடிவாதமாக நின்றது பா.ஜ.க. அப்படியென்றால் நாங்கள் தனித்துப் போட்டியிடுகிறோம் என்று கூறிய என்.ஆர்.காங்கிரஸ், த.வெ.க-வுக்கு தூது அனுப்பியது.
