சென்னை: சென்னையில் வங்கி மேனேஜரின் கன்னத்தில் அறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை அடையாறில் மு.க.அழகிரியின் மகள் கயல்விழிக்கு சொந்தமான கட்டடத்தில் எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தில் உள்ள லிப்ட் பழுது ஏற்பட்டதால், கயல்விழியின் உதவியாளரை தொடர்புகொள்ள எஸ்பிஐயின் என்ஆர்ஐ கிளை மேனேஜர் ஹர்ஷீன் சிங் முயன்றுள்ளார். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை.
இதனால், ஹர்ஷீன் சிங் கயல்விழியை தொடர்பு கொண்டு, லிப்ட் பிரச்னை குறித்து கூறியுள்ளார். இதையடுத்து, வங்கி கிளைக்கு நேரில் வந்த கயல்விழி, மேனேஜர் ஹர்ஷீன் சிங்கிடம் தனக்கு போன் செய்தது பற்றி காட்டமாக கேள்வி கேட்க ஆரம்பித்தார்.
அப்போது, ஹர்ஷீன் சிங் தனது இரு கைகளையும் கன்னத்தில் வைத்தது போன்று அமர்ந்திருந்தார். ஆத்திரம் அடைந்த கயல்விழி, மேனேஜரின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியது.
இந்த நிலையில், மேனேஜரை தாக்கிய கயல்விழியின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, எஸ்பிஐ ஆர்.பி.ஓ முதன்மை மேனேஜர் நமச்சிவாயம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
