தர்மேந்திர பிரதான் பதவி விலகல் வெற்றி.. ஆனாலும் ஒரு கவலை: வெளிப்படையாக சொன்ன திருமாவளவன் – vck mp thirumavalavan about dharmendra pradhan resignation

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நீட் வினாத்தாள் முறைகேடு உள்ளிட்ட விவகாரத்திற்கு பொறுப்பேற்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சார்ந்தவர்கள் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்றைய தினம் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவதாக ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து அவருடைய பதவி விலகலை போராட்டக்காரர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். இது மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. ஆளும் அரசினை இந்த தொடர் போராட்டம் அசைத்து பார்த்துள்ளது எனவும் பலரும் கருத்துக்கள் தெரிவித்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் விசிக தலைவர் எம்பி திருமாவளவன், தர்மேந்திர பிரதான் பதவி விலகல் தொடர்பாக கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு மாதத்திற்கு மேலாக இந்த போராட்டம் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்றது. சமூக ஆர்வலர் அறிவியல் ஆய்வாளர் சோனம் 25 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று, மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தொடர்ந்து மாணவர்களும், இளைஞர்களும் சாரை சாரையாக டெல்லியை நோக்கி அணித்திரண்டு வந்தனர். லட்சக்கணக்கில் இளம் தலைமுறையினர் கட்சி பாகுபாடு இன்றி, கட்சி சார்பின்றி பங்கேற்றனர்.

இந்த போராட்டம் தற்போது மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இப்போராட்டம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தர்மேந்திர பிரதான் தற்போது பதவி விலகியுள்ளார். சிஜேபி கட்சியை சார்ந்த தலைவர்கள் தர்மேந்திர பிரதான், ராஜினாமா செய்யவில்லை என்றால் நாங்கள் அடுத்தக்கட்ட போராட்டத்தை முன்னெடுப்போம். பிரதமர் பதவி விலக கோரி போராடுவோம் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தார்கள். இந்த சமயத்தில் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

அடுத்தக்கட்ட போராட்டத்தை இது தடுத்துள்ளது. அவருடைய பதவி விலகல் இந்த போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று மகிழ்ச்சி அடைந்தாலும், நீட் தேர்வு தொடரும் என்பது கவலை அளிக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்த வரை நீட் தேர்வினை முற்றிலுமாக ஒலிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்றும் விசிக 27 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தோம்.

இப்போது தர்மேந்திர பிரதான் பதவி விலகலை தொடர்ந்து, நீட் தேர்வை ரத்து செய்யுங்கள் என்ற ஒற்றை கோரிக்கையை முன்னிறுத்தி சென்னையில் ஓரிடத்தில் இந்த போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு விசிக தலைவர் எம்பி திருமாவளவன், தர்மேந்திர பிரதான் பதவி விலகல் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது கவனம் பெற்று கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு ஆரம்பம் முதலே நீட் தேர்வினை எதிர்த்து கொண்டு வருகிறது. இதற்கிடையில் மாணவர்களின் தொடர் போராட்டத்தினை தொடர்ந்து, இதற்கு நீட் தேர்வு ஒன்றே நிரந்தமான தீர்வு என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். பிற மாநிலங்கள் அனைத்தும் முறையான நீட் தேர்வு வேண்டும் என போராடி வரும் நிலையில், தமிழ்நாடு நீட் தேர்வே வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Source link