ஊரெங்கும் இப்போது ஒரே பேச்சு… ‘சீட்’.
திமுக, அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் என்பது நூறு சதவிகிதம் முடிவடையவில்லை. ‘தளபதியை தலைமை அமைச்சராக ஏற்றுக் கொள்பவர்கள் வரலாம்’ எனக் கூப்பிட்டாலும் ‘விசில்’காரர்கள் பக்கம் எந்தக் கட்சியும் போகவில்லை.
பார்த்தார், ‘அப்ளிகேஷன் போட்டவங்கெல்லாம் வாங்கப்பா’ என ஒரு அறுபது பேருக்கு இன்டர்வியூ வைத்து அனுப்பி விட்டார் விஜய்.
இங்கே நாம் பார்க்கப் போவதும் ஒரு ‘விசில்’ ஏரியா மேட்டர் தான்.
சென்சிடிவான ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் முதுகுளத்தூர் தொகுதியைக் கேட்டுக் காத்திருக்கிறாராம் சமீபத்தில் தவெகவில் சேர்ந்த இமானுவேல் சேகரனின் பேரன் சக்கரவர்த்தி. தாத்தாவின் அரசியலுடன் தொடர்புடைய அந்த தொகுதியிலிருந்து தன்னுடைய அரசியலையும் தொடங்கலாம் என்பதற்காகவே தொகுதியைக் கேட்கிறாராம் சக்ரவர்த்தி.
ஆனால் கட்சியின் பொதுச் செயலாளரோ ‘பரமக்குடி தனித் தொகுதிங்கிறதால் வெற்றி வாய்ப்பு அதிகம்’ எனச் சொல்லி அங்க நிக்கலாமே’ என்கிறாராம்.
`தனித் தொகுதி அடையாளத்துக்குள் திரும்பவும் போகணுமா? நான் பொதுத் தொகுதியில் நின்னே ஜெயிச்சுக் கட்டுறேன். என் உணர்வோட தொடர்பான விஷயமா பார்க்குறேன். தவிர தொகுதியில் இருக்கிற தலித் மக்கள் வாக்குகள் அப்படியே நமக்கு கிடைக்கும். ஆனா முக்குலத்தோர் ஓட்டுகள் திமுக அதிமுகனு பிரியும். அதனால ஈஸியா ஜெயிச்சுடலாம்’ எனச் சாதகமான பாயிண்டுகளை எல்லாம் எடுத்துச் சொன்னாராம் சக்ரவர்த்தி.
‘பொதுச் செயலாளர் அந்தத் தொகுதியை சக்ரவர்த்திக்குத் தர மறுப்பதற்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா’ என விசாரித்தால், தனித் தொகுதியில் நின்னா வெற்றி பெறலாம்னு சொல்லியிருப்பார். அதைத்தாண்டி வேற காரனாம் தேடினா, சக்ரவர்த்திக்கு கட்சியின் மேல்மட்ட முக்கிய நிர்வாகி ஒருவர் ஆதரவு தர்றாரே, அதுவும் கூட ஒரு காரணமா இருக்கலாம்’ என்கிறார்கள், கட்சியின் உள் அரசியலை அறிந்தவர்கள்.
அதிமுக கூட்டணியில் முதுகுளத்தூரை அமமுக கேட்டு வருவதாகச் சொல்கிறார்கள்.!
