புதுடில்லி: கார்கில் போரில் இந்தியாவை காத்த வீரர்களை நினைவு நாளான இன்று (ஜூலை 26) பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.
லடாக்கின் கார்கிலில் உள்ள எல்லை பகுதியை 1999ல் பாகிஸ்தான் ஆக்கிரமிக்க முயன்றது. அவர்களுடன் போரிட்டு விரட்டியடித்த நம் ராணுவத்தின் வீர தீர செயல் கார்கில் வெற்றி தினம் என்ற பெயரில் ஆண்டுதோறும் ஜூலை 26ல் கொண்டாடப்படுகிறது. கார்கில் போர் நினைவு நாளில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
கார்கில் வெற்றி தினத்தன்று, இந்தியாவைப் பாதுகாப்பதில் தங்கள் துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்திய வீரர்களுக்கு நமது தேசம் நன்றியைத் தெரிவிக்கிறது. மிகவும் கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொண்ட அவர்களின் வீரம், என்றென்றும் நாட்டின் பெருமையாக நிலைத்து இருக்கும். அவர்களின் அசைக்க முடியாத தேசபக்தியும் கடமையுணர்வும் வரும் தலைமுறைகளுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.
வீரர்களுக்கு அஞ்சலி
ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கார்கில் வெற்றி தினத்தன்று, நமது தாய்நாட்டைப் பாதுகாக்கத் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த வீரமரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
அவர்களின் வீரம், தளராத உறுதி மற்றும் அசைக்க முடியாத தேசபக்தி ஆகியவை நமது ராணுவத்தின் புகழ்பெற்ற பாரம்பரியத்திற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
தேசம் அவர்களுக்கு என்றென்றும் நன்றி கடன்பட்டிருக்கும். நமது வீரமரணமடைந்த வீரர்களின் அர்ப்பணிப்பு வருங்கால சந்ததியினரை நாட்டிற்கு சேவை செய்ய தொடர்ந்து ஊக்குவிக்கும். இவ்வாறு திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
