தேனியில் வட்டிக்கு பணம் கொடுத்து வந்த 60 வயது மூதாட்டி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சணல் கயிறால் கழுத்து நெரித்து, தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், பணத்திற்காக இந்த கொலை நடந்திருக்குமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி பழைய போஸ்ட் ஆபீஸ் பகுதியில் உள்ள ஓடைத்தெருவில் வசித்து வந்த 60 வயதான ராதா, வட்டிக்கு பணம் கொடுத்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை வழக்கம்போல் அவர் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது, அவர் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், மர்ம நபர்கள் சணல் கயிறை பயன்படுத்தி அவரது கழுத்தை நெரித்ததுடன், தலையை தரையில் பலமாக மோதியதன் மூலம் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், வீட்டு மனை வாங்குவதற்காக ராதா வீட்டில் பணம் வைத்திருந்ததாக தகவல் கிடைத்துள்ளதால், அந்தப் பணத்தை குறிவைத்தே இந்தக் கொலை நடைபெற்றதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read: 100-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் ஆபாச படங்கள்… பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நபர் செய்த அதிர்ச்சி செயல்!
