ஈரான் – இஸ்ரேல் போர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, தங்கம் விலை தாறுமாறாக ஏறி, அதன் உச்சத்தை தொட்ட நிலையில், போர்

ஈரான் – இஸ்ரேல் போர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, தங்கம் விலை தாறுமாறாக ஏறி, அதன் உச்சத்தை தொட்ட நிலையில், போர் ஆரம்பித்த பிறகு இன்னும் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போதிருந்து தங்கத்தின் விலை சரிவின் போக்கில் காணப்படுகிறது.

இதற்கு என்ன காரணம் என, கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தரிடம் கேட்டபோது, “போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயரும், சமையல் எரிவாயு தட்டுப்பாடு நீடிக்கும் என்கிற அச்சம் மேலோங்கி காணப்படுகிறது.

”எண்ணெய் விலை உயர்வால், சரக்கு போக்குவரத்து செலவு கூடி, பணவீக்கம் அதிகரிக்கும். இந்த சூழ்நிலையில், மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்க நினைக்க மாட்டார்கள்.

”மாறாக, வட்டி விகிதத்தை உயர்த்த அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. வட்டி விகிதம் உயர்ந்தால் சந்தையில் பணப்புழக்கம் குறையும். இது தங்கத்தின் விலை வீழ்ச்சிக்கு சாதகமான செய்தி. அதுமட்டுமில்லாமல், தங்கத்தில் முதலீடு செய்தவர்கள், லாபத்தை எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதனாலும் தங்கத்தின் விலை மளமளவென சரிகிறது.

”டாலர் கையிருப்பை அதிகப்படுத்த நினைப்பதால், முதலீட்டாளர்களில் பலரும் தங்கத்தில் இருந்து லாபத்தை எடுத்து, டாலரில் முதலீடு செய்வதாக தெரிகிறது. இதனால் ‘டாலர் இண்டெக்ஸ்’ உயர ஆரம்பித்திருக்கிறது.

”தற்போதைய நிலையில், தங்கம் தனது உச்சத்தில் இருந்து 1,000 டாலர் வரை சரிந்து, மீண்டும் 200 டாலர் அதிகரித்து வர்த்தகமாகிறது. இஸ்ரேல் – ஈரான் போர் நீடித்தால், தங்கத்தில் லாப முன்பதிவு நீடித்து தங்கத்தின் விலை இன்னும் குறையும். மாறாக, போர் நிறுத்தத்துக்கான அமைதி உடன்படிக்கை ஏற்பட்டால் விலை சரிவு தடைபட வாய்ப்பு இருக்கிறது”. இவ்வாறு அவர் கூறினார்.

Source link