சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் நேற்றைய அறிக்கை:
தமிழகத்தில் நேற்று சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதேசமயம், மதுரை உள்ளிட்ட இடங்களில், இயல்பை விட 5 டிகிரி செல்ஷியஸ் அதிக வெப்பம் பதிவானது. தமிழக கடலோரப் பகுதிகளில், கீழ்மட்ட வளிமண்டலத்தில், ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
அதனால், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் சில இடங்களில், இடி, மின்னல், பலத்த காற்றுடன், இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். மாநிலத்தின் மற்ற சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும், இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில், லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
