நீட் போராட்டத்தில் முதல்வர் இமேஜ் ‘டேமேஜ்’ உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்? தவெக – கம்யூனிஸ்ட் இடையே உரசல் – neet protest intelligence report flags damage to cm image sparks tvk cpi rift

இந்தியா முழுவதும் சமீபத்தில் நடைபெற்ற முக்கியமான மாணவர் போராட்டங்களில் ஒன்றாக, நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டம் பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 36 நாட்களுக்கும் மேலாக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு, நீட் தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராகவும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இளைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் பரவிய மாணவர் எழுச்சி

டெல்லியில் தொடங்கிய இந்தப் போராட்டம், அங்கு மட்டுமே நின்றுவிடாமல் தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கும் பரவியது. இதன் மூலம் நீட் எதிர்ப்பு போராட்டம் தேசிய அளவிலான மாணவர் இயக்கமாக உருவெடுத்தது.

தமிழகத்தில் வலுப்பெற்ற நீட் எதிர்ப்பு போராட்டம்

சென்னையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் முன்னெடுத்த போராட்டத்திற்கு பல்வேறு மாணவர் அமைப்புகள், சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதனால் தமிழகத்திலும் நீட் எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்தது.

பாலன் இல்லத்தில் இடதுசாரிகளின் முழு ஆதரவு

இந்தப் போராட்டம் நடைபெற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகமான பாலன் இல்லம் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு உணவு, தங்குமிடம், ஓய்வெடுக்கும் வசதி, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை தேவைகளையும் இடதுசாரிகள் ஏற்பாடு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

போராட்டத்தில் தவெக மீது விமர்சனம்

டெல்லியில் மாணவர் போராட்டம் காவல்துறையால் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. பாலன் இல்லத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய சில மாணவர்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதல்வருமான விஜயின் நிலைப்பாடு குறித்தும் விமர்சனங்களை முன்வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போராட்டத்தை ஒருங்கிணைத்த சிலர் அரசை நேரடியாகவிமர்சிப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்பட்டாலும், மேடையில் விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கூட்டணிக்குள் ஏற்பட்டதாக கூறப்படும் அதிருப்தி

இந்தச் சம்பவம் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிடம் தமிழக வெற்றிக் கழக உயர்மட்ட நிர்வாகம் தனது அதிருப்தியை தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இடதுசாரிகள் தரப்பில் என்ன விளக்கம்?

இதுகுறித்து சில இடதுசாரி நிர்வாகிகள் கூறுகையில், ஆரம்பத்தில் பாஜக அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம், பின்னர் தமிழக அரசையும் முதல்வர் விஜயையும் விமர்சிக்கும் திசையில் நகர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியனிடம் தமிழக வெற்றிக் கழக உயர்மட்டம் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தவெக எடுக்கும் முடிவு…காத்திருக்கும் டெல்லி?

இடதுசாரிகளுக்குள் கருத்து வேறுபாடு

இதற்கிடையில், இந்த விவகாரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்திருந்தாலும், இடதுசாரி கட்சிகள் இன்னும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. அப்படியிருக்கையில், இடதுசாரிகளின் நடவடிக்கைகள் குறித்து கேள்வி கேட்க தமிழக வெற்றிக் கழகத்திற்கு என்ன அதிகாரம் உள்ளது? அவர்களுக்கு நாம் ஏன் விளக்கம் அளிக்க வேண்டும்? என்ற கேள்விகளை சில இடதுசாரி நிர்வாகிகள் எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கூட்டணிக்குள் மட்டுமல்லாமல் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் உருவாகியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Source link