'கள்'ளுக்கு அனுமதி கேட்டு வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

மதுரை: தமிழகத்தில், கள் இறக்க, விற்க அனுமதிக்க கோரி தாக்கலான வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க இறுதி அவகாசம் வழங்கி, உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

துாத்துக்குடி ஆறுமுகம் தாக்கல் செய்த மனு: கள்ளுக்கான தடையை விலக்கக்கோரி, ஏற்கனவே ஒரு வழக்கு தாக்கலானது. அதன் விசாரணையின் போது, ‘கள்ளில் போதைக்காக பல வேதிப்பொருட்கள் கலக்கப்படுவதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. கள் உடல் நலனுக்கு கேடு’ என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனையை பெருக்குவதற்காகவே, கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு மதுபானங்களை விட, கள்ளில் குறைவாகவே போதை உள்ளது.

எனவே, மதுவிலக்கு சட்டத்தில் கள் இறக்கவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டிருப்பதை நீக்க வேண்டும். தனி மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்காக பனை மரங்களில் இருந்து கள் இறக்கவும், விற்கவும் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் அமர்வு, தமிழக உள்துறை செயலர், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் என்.சதீஷ் குமார், எம்.ஜோதிராமன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:

2020ல் வழக்கு தொடரப்பட்ட போதிலும், தற்போது வரை தமிழக அரசு தரப்பு பதில் மனு தாக்கல் செய்யவில்லை. ஏப்., 27க்குள் அரசு தன் பதிலை தாக்கல் செய்ய தவறினால், அடுத்த விசாரணையின் போது அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு எச்சரித்து, அன்றைய தினத்திற்கு வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Source link