புதுடெல்லி: சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற பயத்தால் பொதுமக்கள் பீதியடைந்து சிலிண்டர்களை முன்பதிவு செய்வது தற்போது குறைந்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழலுக்கு மத்தியிலும், உள்நாட்டில் சமையல் எரிவாயு உற்பத்தி 40 சதவீதம் அதிகரித்துள்ளது. சில்லறை விற்பனை நிலையங்களில் கையிருப்பு தீர்ந்துவிடும் நிலை இல்லை. பொதுமக்கள் அச்சமடைந்து சிலிண்டர்களை முன்பதிவு செய்வது தற்போது குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 11,300 டன் வணிகப் பயன்பாட்டு காஸ் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
