ராஜ்கோட்: துபாயில் இருந்து 194 பேருடன் வந்த இண்டிகோ விமானத்தின் சரக்கு பகுதியில் திடீரென புகை வந்ததால், அந்த விமானம் குஜராத்தின் ராஜ்கோட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
துபாயில் இருந்து 194 பேருடன் இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான 6E1452 என்ற எண் கொண்ட விமானம் மும்பை நோக்கி வந்து கொண்டு இருந்தது. அப்போது, விமானத்தின் சரக்கு பகுதியில் இருந்து புகை வந்ததை ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.
உடனடியாக ராஜ்கோட் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதுடன், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு , பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விமானத்தில் புகை வந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
