சென்னை: வருவாயை பெருக்கும் வழிமுறைகளை கண்டறிய மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழக அரசின் வருவாயை உயர்த்துவதற்கான வழிமுறைகளை கண்டறிந்து அறிக்கை அளிக்க 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவின் தலைவராக புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவருமான மாண்டேக்சிங் அலுவாலியா நியமிக்கப்பட்டு உள்ளார். குழுவில் அவருடன் மேலும் 5 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.
அவர்களின் பெயர் விவரம் வருமாறு;
* கே.பி. கிருஷ்ணன்
* அர்பிந்த் மோடி
•நஜிப் ஷா(ஐ.ஆர்.எஸ்., ஓய்வு)
•எம்.ஏ. சித்திக், ஐ.ஏ.எஸ்
* சுரேஷ் பாபு
இந்த குழுவானது மாநிலத்தின் மொத்த வரி மற்றும் வரி அல்லாத வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அதனை மேம்படுத்துவது குறித்தும் கொள்கை மற்றும் நிர்வாக செயல்பாடுகள் குறித்தும் அரசுக்கு ஆலோசனைகளை வழங்கும்.
மேலும், வரி ஏய்ப்பு, நிர்வாக செயல்திறனில் உள்ள குறைபாடுகளை சரிசெய்யும் நடவடிக்கைகள், மதுபானம் மீதான ஒழுங்கு முறை மற்றும் வரிவிதிப்பு கொள்கையில் மாற்றங்களை செய்து அதில் கிடைக்கும் வருவாயை அதிகரிப்பதற்கான வழிகளையும் பரிந்துரைக்கும்.
