மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், மதுபாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டதாக செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சமூகவலைதளத்தில் படங்கள் வெளியிட்ட நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் இந்தாண்டு செப்.,17ல் நடக்க உள்ள நிலையில் கோயில் பாதுகாப்புக்கு சவால் விடும் வகையில் பொற்றாமரைக்குளத்தில் ‘ரீல்ஸ்’ எடுப்பது, கோயில் வளாகத்தை ‘ட்ரோன்’ மூலம் படம் பிடிப்பது என அத்துமீறல்கள் தொடர்கின்றன. கோயிலுக்குள் அலைபேசி கொண்டு செல்ல தடை உள்ள நிலையில், ‘ரீல்ஸ்’ எடுத்த இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.
இதனால் ‘ரீல்ஸ்’ எடுப்பது தொடர்ந்தாலும் ஆச்சரியமில்லை. ‘ட்ரோன்’ மூலம் மீனாட்சி கோயிலை வீடியோ எடுத்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கோயிலில் கோசாலை பகுதியில் தடை செய்யப்பட்ட சிகரெட், பாக்கு உள்ளிட்ட பொருட்கள், திருக்கல்யாண மண்டபம் அருகே மதுபாட்டில்களும் இருந்ததாக சமூகவலைதளத்தில் படங்களுடன் வைரலானது.
அதிர்ச்சியடைந்த கோயில் நிர்வாகமும், போலீசாரும் நேற்று விசாரணை மேற்கொண்டதில் அந்த படங்கள் ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது என தெரியவந்தது.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க உள்ளனர். இதுபோன்ற விஷமத்தனமான செயல்களில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை பாயும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
